மத்திய பல்கலை.களில் இட ஒதுக்கீடு - கருணாநிதி கோரிக்கை நிராகரிப்பு
டெல்லி: மத்திய அரசு அமைக்கவுள்ள 15 மத்திய பல்கலைக்கழகங்களிலும் மெரிட் அடிப்படையில்தான் மாணவ, மாணவியர் சேர்க்கப்படுவர். இங்கும் இட ஒதுக்கீடு தந்தால், உலகத் தரம் வாய்ந்த என்ற பதத்திற்கு அர்த்தம் இல்லாமல் போய் விடும் என்று மத்திய மனித வளத்துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி விடுத்த கோரிக்கையை அவர் நிராகரித்துள்ளார்.
சமீபத்தில் தமிழகம் வந்த மத்திய அமைச்சர் கபில் சிபல், திருவாரூரில் அமையும் மத்திய பல்கலைக்கழகத்தைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் கருணாநிதி, மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழக ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
ஆனால் தற்போது இந்தக் கோரிக்கையை கபில் சிபல் நிராகரித்துள்ளார். கருணாநிதி வைத்த கோரிக்கை குறித்து நேற்று ராஜ்யசபாவில் திமுக எம்.பிக்கள் கபில் சிபலிடம் கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த கபில் சிபல், இட ஒதுக்கீடு என்ற முடிவுக்கு நாம் போனால் மெரிட் என்ற வார்த்தைக்கு அர்த்தம் இல்லாமல் போய் விடும். உலகத் தரம் என்ற பதத்திற்கு அர்த்தம் இல்லாமல் போய் விடும்.
உலகத் தரம் வாய்ந்த மையங்களாக, ஆய்வு மையங்களாக, அறிவுசார் மையங்களாக மத்திய பல்கலைக்கழகங்களை உருவாக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் கொள்கை. இதன் அடிப்படையில்தான் புதிய மத்திய பல்கலைக்கழகங்கள் குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டது.
இந்த மையங்கள் அனைத்தும் ஆய்வை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படவுள்ளன. ஆய்வுப் பணிகளுக்கு இங்கு முக்கியத்தும் அளிக்கப்படவுள்ளது. எனவே அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே இங்கு மாணவ, மாணவியர் சேர்க்கப்படுவர்.
இந்த திட்டத்தை இட ஒதுக்கீடு மூலம் நீர்த்துப் போகச் செய்ய நாங்கள் விரும்பவில்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications