தினகரன் தாக்குதல்: 'அட்டாக்' பாண்டி விடுதலை
மதுரை: தினகரன் பத்திரிகை அலுவலகத்தின் மீதான தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 'ஆட்டாக்' பாண்டி மற்றும் டி.எஸ்.பி.ராஜாராம் உள்ளிட்ட 17 பேரையும் மதுரை செஷன்ஸ் கோர்ட் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு மே 9ம் தேதி மதுரை தினகரன் பத்திரிகை அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித் தனமான வன்முறை தாக்குதலில் பொறியாளர்கள் வினோத்குமார் (26), கோபிநாத் (25) மற்றும் அலுவலக ஊழியர் முத்துராமலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக 'அட்டாக்" பாண்டி உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர். சம்பவத்தின்போது பணியில் இருந்த ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. ராஜாராம் மீது வன்முறையை தடுக்க தவறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மதுரை செசன்ஸ் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது.
பின்னர் வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு 'அட்டாக்' பாண்டி உள்ளிட்ட 16 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மதுரை செசன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரத்ன ராஜூ, அட்டாக் பாண்டி உள்பட 16 பேரையும் பாதுகாப்புக்கு நின்றிருந்த டி.எஸ்.பி.ராஜாராமையும் விடுதலை செய்தார்.