மும்பை தாக்குதல்: பாக. ராணுவ அதிகாரிக்கு தொடர்பு- யுஎஸ்
டெல்லி: மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக சிக்கியுள்ள பயங்கரவாதி ஹெட்லி மற்றும் பல்வேறு தீவிரவாத அமைப்புகளோடு, பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ அதிகாரிக்கு உள்ள தொடர்பை ஆதாரங்களுடன் எஃப்.பி.ஐ அம்பலப்படுத்தியுள்ளது.
26/11 மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதிகள் ஹெட்லி மற்றும் ராணா அமெரிக்காவில் கைது செய்யப்பட்டனர். தாக்குதல் சம்பவத்தில் இருவருக்கும் தொடர்பு உள்ளது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், ஹெட்லி-ராணாவுக்கு எதிராக அமெரிக்க புலனாய்வுத் துறை தயாரித்துள்ள குற்றப்பத்திரிகையில், பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ அதிகாரியின் பெயரும் இடம் பெற்றுள்ளது. லாகூரைச் சேர்ந்த ஒய்வுபெற்ற மேஜர் அப்துல் ரஹ்மான் ஹாசிம் சயிது (எ) பாஷா பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றியவர்.
ஹெட்லி மற்றும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளுடன் சேர்ந்து தாக்குதல் மற்றும் சதி திட்டத்தில் ஈடுபட்டதாக இவர் மீது சிகாகோ கோர்ட்டில் எஃப்.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள மிக பயங்கரஸ சக்தி வாய்ந்த தீவிரவாதியாக கருதப்படும் ஹூஜி தலைவர் இலியாஸ் கஷ்மீரி, லஷ்கர் இ தொய்பா ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டிருந்தாக மேஜர் சயிது மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பை தீவிரவாத தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஹெட்லிக்கு இந்த சயிதுடன் முக்கிய தொடர்பு இருப்பதையும் எஃப்.பி.ஐ குற்றப்பத்திறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக டென்மார்க் மற்றும் அமெரிக்காவின் வெளியே சில இடங்களில் தீவிரவாத சதிச் செயலுக்காக குற்றம்சாட்டப்பட்டுள்ள சயிது, பல்வேறு சதித் திட்டங்களுக்கும் ஹெட்லிக்கு உடந்தையாக செயல்பட்டிருப்பதாக எஃப்.பி.ஐ தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கும் ஹெட்லிக்கும் இடையே பாலமாக இவர் இருந்துள்ளார். ஹெட்லி பாகிஸ்தான் சென்றபோது, தீவிரவாத அமைப்புகளுடன் சந்திப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்.
மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்துடன் இவருக்கு உள்ள தொடர்பு குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
இவர்களின் தொலைபேசி மற்றும் இ-மெயில் உரையாடல்களின் பதிவையும் எஃப்.பி.ஐ ஆதாரமாக வைத்துள்ளது. இப்படிப்பட்ட அந்த மாஜி ராணுவ அதிகாரியை பாகிஸ்தான் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்து பின்னர் விடுவி்த்தது குறிப்பிடத்தக்கது.