விடுதலைப் புலிகள் தாக்குவார்கள்: பீதியில் பொன்சேகா
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகளை ஒட்டுமொத்தமாக அழித்துவிட்டதாக இலங்கை அரசும், ராணுவமும் கூறியுள்ள போதிலும், அதிபர் தேர்தலில் போட்டியிடும் பொன்சேகாவுக்கு புலிகள் பயம் இன்னும் போகவில்லை. தனக்கு புலிகளால் ஆபத்து இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
அடுத்த சில வாரங்களில் நடைபெற உள்ள இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிடுகிறார்.
விடுதலைப்புலிகளை போரில் தோற்கடிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் பொன்சேகா. தற்போது விடுதலைப்புலிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசு கூறுகிறது.
எனினும் விடுதலைப்புலிகள் மீண்டும் தங்களின் போராட்டத்தை தொடங்குவார்கள் என்ற அச்சம் இலங்கை அரசு தரப்பில் வலுவாக இருந்து வருகிறது.
இதை எதிரொலிக்கும் வகையில் பொன்சேகா, தனது உயிருக்கு விடுதலைப்புலிகளால் ஆபத்து என கூறி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
போர் முடிவுக்கு வந்து விட்ட போதிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகள் உயிரோடு தப்பியிருக்க வாய்ப்பு உள்ளது. அவர்கள் மக்களோடு மக்களாக கலந்து உள்ளனர்.
விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்கள் பலரும் பலியாகி விட்டனர். ஆனால் தற்கொலைப் படையை சேர்ந்தவர்கள் பலர் இன்னும் இருக்கின்றனர். விடுதலைப்புலிகளின் சர்வதேச தொடர்புகள் இன்னும் வலுவாக அப்படியே இருக்கின்றன.
எனவே எனது உயிருக்கு விடுதலைப்புலிகளால் அச்சுறுத்தல் நீடிக்கிறது. கடந்த காலங்களில் அதிபர் தேர்தலில் போட்டியிட்டவர்கள் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். அதே போல என் மீதும் தாக்குதல் நடத்தலாம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications