தெலுங்கானாவை தனி மாநிலமாக்குவதைத் தவிர வேறு வழியில்லை - ப.சிதம்பரம்

தெலுங்கானா விவகாரம் இன்று ராஜ்யபாவில் புயலைக் கிளப்பியது. நாடாளுமன்றக் கூட்டத் தொடர்ந்து நடந்து வரும் சமயத்தில் இதுபோன்ற முக்கிய அறிவிப்புகளை சபைக்குத் தெரிவிக்காமல் அறிவித்தது குறித்து பாஜக கடும் எதிர்ப்பு கிளப்பியது.
இதனால் ராஜ்யசபாவில் இருமுறை பெரும் அமளி ஏற்பட்டது. பின்னர் ப.சிதம்பரம் எழுந்து இதுகுறித்து விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், நேற்று வெங்கையா நாயுடு தெலுங்கானா விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியபோது அரசு பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தது. இதனால் உறுதியான பதிலை அளிக்க முடியவில்லை.
நேற்று நள்ளிரவுவாக்கில்தான் பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்தன. ஒரு நிமிடம் கூட தாமதிக்க முடியாத நிலையில்தான் நள்ளிரவில் தெலுங்கானா மாநிலம் குறித்த அறிவிப்பை அரசு வெளியிட நேர்ந்தது. வேறு வழியில்லை அரசுக்கு.
சந்திரசேகர ராவின் உடல் நலம் மோசமடைந்து வந்ததால் அவரது உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில்தான் உடனடியாக அந்த முடிவு அறிவிக்கப்பட்டது. மேலும், ஹைதராபாத்திலும், ஆந்திர மாநிலத்திலும் சட்டம் ஒழுங்குக்குப் பெரும் பங்கம் வந்து விடக் கூடாது என்பதற்காகவுமே உடனடியாக அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவசியம் ஏற்பட்டதால்தான் இரவு நேரத்தில் இந்த முடிவை நாங்கள் அறிவிக்க நேரிட்டது.
சந்திரசேகர ராவ் என்னுடன் பேசினார். நன்றி கூறிக் கொண்டார். இந்த சபை தன் மீது கொண்ட அன்புக்காகவும், காட்டிய கவலைக்காகவும் நன்றி கூறிக் கொண்டார் என்றார் சிதம்பரம்.
இந்த நிலையில் வெங்கையா நாயுடு எழுந்து மீண்டும் ஆவேசமாகப் பேசினார். அவருக்கு ஆதரவாக பாஜக உறுப்பினர்கள் எழுந்து பேசினர். இதனால் கிட்டத்தட்ட ஐந்து நிமிடம் அவையில் பெரும் கூச்சல், குழப்பம் நிலவியது. ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரி குறுக்கிட்டு அமைதிப்படுத்தினார். பின்னர் கேள்வி நேரம் தொடங்கி நடந்தது.












Click it and Unblock the Notifications