தீவிரவாதிகளின் பாசறையாக மாறி விட்டது பாக்.: ஹிலாரி கிளின்டன்
வாஷிங்டன்: தீவிரவாதிகளுக்கு வழங்கப்படும் பயிற்சிகளும், ஆலோசனை, உத்தரவு எல்லாம் பாகிஸ்தானில் இருந்து தான் வருகின்றன என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் கூறியுள்ளார்.
தீவிரவாத தாக்குதல் சதி திட்டம் தொடர்பாக அமெரிக்காவில் ஹெட்லி, ராணா ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் வாஷிங்டனில் ஹிலாரி நிருபர்களிடம் கூறுகையில்,
அப்பாவிகளை கொல்லும் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து தான் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. சதி திட்டங்கள் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் என்ன செய்யவேண்டும் என்ற கட்டளைகள் எல்லாமுமே இங்கிருந்து தான் வழங்கப்படுகின்றன.
இதை எண்ணிப்பார்க்கும் போது மிகவும் கவலையாக இருக்கிறது. இதுபோன்ற பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இடமளிக்கும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுடன் நாம் இன்னும் நெருக்கமாக இணைந்து தீவிரவாத கட்டமைப்புகளை வேரறுக்க வேண்டும்' என்றார்.
பாகிஸ்தானில் 5 அமெரிக்க முஸ்லீம்கள் கைது...
இதற்கிடையே, பாகிஸ்தானில் ஐந்து இளம் அமெரிக்க முஸ்லீ்ம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஜெய்ஸ் இ முகம்மது அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் பஞ்சாப் நெடுஞ்சாலைத் துறை ஊழியர் ஒருவரும் கைதாகியுள்ளார்.
சர்கோதா என்ற இடத்தில் உள்ள ஒரு சொகுசு பங்களாவில் வைத்து அனைவரும் கைதாகினர். இந்த பங்களா ஜெய்ஸ் இ முகம்மது அமைப்பின் தலைவர் ஒருவருக்குச்
சொந்தமானது.
கைதானவர்களிடமிருந்து லேப்டாப் கம்ப்யூட்டர்கள், சிடிக்கள், ஜிஹாதி இலக்கிய நூல்கள், முக்கிய இடங்களின் வரைபடங்கள் பறிமுதல் செய்யபப்ட்டுள்ளன.
இவர்கள் தீவிரவாத சதித் திட்டத்துடன் இருந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.