வேன்-பஸ் மோதல்-தீப்பிடித்து 2 பேர் கருகி பலி
செங்கோட்டை: கடையநல்லூர் அருகே நேற்றிரவு ஏற்பட்ட பயங்கர விபத்தில் வேனும் பஸ்சும் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து எரிந்தன. இதில் 2 பேர் உடல் கருகி இறந்தனர்.
மதுரையில் இருந்து செங்கோட்டை நோக்கி நேற்றிரவு 11 மணிக்கு அரசு பஸ் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அதே போல் செங்கோட்டையில் இருந்து கடையநல்லூர் நோக்கி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது.
மங்களபுரம் என்ற இடத்தின் அருகே உள்ள வளைவான சாலை பகுதியில் இரண்டும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சின் டீசல் டேங்க் வெடித்து சிதறியது. இந்த பயங்கர விபத்தில் பஸ்சும், வேனும் தீப்பிடித்து எரிந்தன.
இதை பார்த்ததும் பஸ்சில் இருந்த 30க்கும் மேற்பட்ட பயணிகள் அலறியடித்து இறங்கி அங்கிருந்து ஓட்டம் பிடிததனர்.
ஆனால் வேனுக்குள் இருந்த டிரைவர் உள்ளிட்ட 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். வேன் மற்றும் பஸ் தீப்பிடித்ததில் அங்கிருந்த மரமும் கருகி சாம்பலானது.
விபத்து பற்றி அறிந்ததும் கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை பகுதிகளை சேர்ந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்து உடலை கைப்பற்றினர். இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லையில் தொடர் விபத்து- பலி 2:
நெல்லையில் அடுத்தடுத்து நடந்த விபத்தில் கல்லூரி மாணவி உட்பட இருவர் பலியாகினர்.
நெல்லை வண்ணார்பேட்டை சிலப்பதிகார தெருவை சேர்ந்தவர் முத்து பத்மாவதி. பெற்றோரை இழந்த இவர் வண்ணார்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.
இன்று காலை முத்துபத்மாவதி மொபட்டில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். பழையபேட்டை அருகே செல்லும்போது எதிரே தென்காசியில் இருந்து நெல்லைக்கு வந்து கொண்டிருந்த வேன் அவர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த முத்து பத்மாவதியை நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துமனைக்கு கொண்டு வநதனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் இறந்தார்.
பழையபேட்டை சண்முக ரங்கநாதபுரம் தெருவை சேர்ந்தவர் முத்தையா. பாளையங்கோட்டையில் உள்ள டிம்பர் டிப்போவில் வேலை பார்த்து வந்த அவர் இன்று காலை பைக்கில் தனது மனைவியுடன் பாளையங்கோட்டைக்கு வந்து கொண்டிருந்தார்.
கொக்கிரகுளம் ஆற்று பாலம் அருகே வரும்போது எதிரே வந்த வேன் அவர்கள் மீது மோதியது. இதில் முத்தையா சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது மனைவி காயமடைந்து நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications