பிலிப்பைன்ஸ்: 55 குழந்தைகள்-பெண்கள் கடத்தல்
மணிலா: பிலிப்பைன்சில் பள்ளியில் புகுந்த கொள்ளைக் கும்பல் குழந்தைகள், ஆசிரியர்கள், பொது மக்கள் என 72 பேரை துப்பாக்கி முனையில் கடத்தினர்.
இதில் 17 பேரை அவர்களே விடுவித்துவிட்ட நிலையில் மேலும் 9 பெண்கள் உட்பட 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ளவர்களை மீட்க கடத்தல் கும்பலுடன் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடக்கிறது.
பிலிப்பைன்ஸ், அகுசன் டெல்சர் பகுதியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் நேற்று கொள்ளை கும்பல் ஆயுதங்களுடன் புகுந்து அங்கிருந்த பள்ளிக் குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என 72 பேரை துப்பாக்கி முனையில் கடத்தினர்.
குழந்தைகள், முதியோர் என 17 பேரை வழியிலேயே இறக்கிவிட்ட கொள்ளையர்கள், 55 பேரை மட்டும் கடத்தி சென்றனர். அனைவரையும் பிலிப்பைன்சின் தெற்கே மலைப்பகுதியில் உள்ள புராஸ் பெரிதாத் நகரில் அடைத்து வைத்துள்ளனர்.
ஏற்கனவே போலீசாரால் வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வது மற்றும், தங்கள் மீதான வழக்குகளை எல்லாம் வாபஸ் பெறுவது போன்ற கோரிக்கைகளுக்கு அரசு ஒப்புதல் தந்தால் தான் 55 பேரையும் விடுவிப்போம் என கடத்தல்காரர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதனால் கடத்தப்பட்டவர்களை மீட்க கொள்ளையர்களுடன் பேச்சுவார்தை நடத்தப்பட்டு வந்தது. முதல்கட்ட பேச்சுவார்த்தையில் ஒன்பது பெண்கள் மற்றும் ஒரு சிறுவனை மட்டும் கடத்தல்காரர்கள் விடுவித்துள்ளனர்.
மேலும் 47 பேர் கடத்தல்காரர்களிடம் சிக்கியுள்ளனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.