சிற்பம் விழுந்து பக்தர் பலி- ரூ.50 ஆயிரம் நிவாரணம்
சென்னை: கோயி்ல் மண்டபக் கூரையில் இருந்த கான்கிரீட் சிற்பம் விழுந்ததால் பலியானவரின் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் மேல் மண்டபத்தின் கூரையில் அமைக்கப்பட்டிருந்த காங்கிரீட் சிற்பம் நேற்று திடீரென்று பெயர்ந்து விழுந்தது.
இதில் அங்கிருந்த திருப்பூர் பிச்சம்பாளையத்தை சேர்ந்த 72 வயதான துரைராஜ் என்பவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.
இறந்தவரின் குடும்பத்துக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள முதல்வர் கருணாநிதி, துரைராஜ் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியாக ரூ.50 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளார். காயம் அடைந்த 3 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விபத்துக்கான காரணத்தையும், இதற்கு யார் பொறுப்பு என்பதையும் விசாரித்து அறிவிக்கும்படி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.