ஏன் சொல்லாம வந்தீங்க?-தமிழகத்திடம் கேரளா பாய்ச்சல்
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புத் தொடர்பாக வழக்கமான கண்காணிப்புப் பணியில் தமிழக பொறியாளர்களும் தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்களும் ஈடுபட்டதற்கு கேரளம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
தமிழக பொறியாளர்களை அணைப் பகுதிக்குச் செல்ல விடாமல் தடுப்பதை கேரளம் ஒரு வேலையாக வைத்துக் கொண்டுள்ளது.
இந் நிலையில் தீவிரவாத மிரட்டல் காரணமாக நாடு முழுவதும் அணைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக தமிழக பொறியாளர்கள் நேற்று மாலை தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்களுடன் முல்லைப் பெரியாறு அணைக்குச் சென்றனர்.
இதற்கு கேரளம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இது குறித்து அம் மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பிரேமச்சந்திரன் கூறுகையில்,
மத்தியக் குழுவினரோ அல்லது தமிழக பொறியாளர்களோ முல்லைப் பெரியாறு அணைக்கு வருவதற்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால் அதை ஏன் எங்களிடம் சொல்லாமல் வர வேண்டும்?.
நேற்று தமிழக குழுவுடன் மத்தியக் குழுவும் வந்துள்ளது. (தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்களைத்தான் மத்தியக் குழு என்கிறார்). அதைத் தான் எங்களால் ஏற்க முடியவில்லை என்றார்.
முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தமிழகத்தின் வசம் தான் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் அணையைப் பார்வையிடச் செல்லும் ஒவ்வொரு முறையும் அவர்களிடம் சொல்லிவிட்டுத் தான் போக வேண்டும் என்ற அவசியம் தமிழகத்துக்கு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.