சங்கரன்கோவில்: விசைத்தறி தொழிலாளர்கள் 6வது நாளாக ஸ்டிரைக்
சங்கரன்கோவில்: ஊதிய உயர்வு பிரச்னை தொடர்பாக விசைத்தறி தொழிலாளர்கள் 6வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் 60 சதவீத ஊதிய உயர்வு, விடுமுறை சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விசைத்தறி தொழிலாளர்கள் கடந்த 7ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கதிரேசன் தலைமையில் இரண்டாவது முறையாக பேச்சுவார்த்தை நடந்தது. மாவட்ட தொழிலாளர் நலத்துறை துணை இயக்குனர் சுந்தர்ராஜன், தொழிலாளர் நல அலுவலர் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள், உரிமையாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
உரிமையாளர்கள் தரப்பில் 3 சதவீத ஊதிய உயர்வு வழங்குவதற்கு இசைவு தெரிவிக்கப்பட்டது. இதற்கு தொழிலாளர்கள் சம்மதம் தெரிவிக்காததால் 4 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து விசைத்தறி தொழிலாளர்களின் போராட்டம் 6வது நாளாக இன்றும் நீடிக்கிறது.