போக்குவரத்து துறை Vs பள்ளி வேன்கள்: தவிக்கும் குழந்தைகள்!
சென்னை: அளவுக்கு அதிகமான மாணவ- மாணவிகளை ஏற்றிச் செல்லும் பள்ளி வேன், பஸ்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை எச்சரித்துள்ளது.
ஆனால், அதிக மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்காவிட்டால் ஸ்டிரைக்கில் ஈடுபடுவோம் என பள்ளி வேன்-பஸ் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
வேதாரண்யத்தில் பள்ளி வேன் விபத்துக்குள்ளாகி 9 குழந்தைகள் பலியானதயைடுத்து தமிழகம் முழுவதும் மாணவ- மாணவிகளை ஏற்றிச் செல்லும் வேன்- பஸ்களை போக்குவரத்து அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.
இதில் பெர்மிட் இல்லாத வாகனங்கள், லைசென்ஸ் இல்லாமல் ஓட்டிய டிரைவர்கள் பிடிபட்டதோடு, அதிக மாணவ- மாணவிகளை ஏற்றிச் சென்ற வாகனங்களும் பிடிபட்டன.
அந்த வாகனங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ஒரு வேனி்ல் 12 மாணவ, மாணவிகளைத் தான் ஏற்றலாம் என்ற விதி உள்ளது. இதை மீறியதற்காக வேன் உரிமையாளர்கள், ஓட்டனர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்ததால் அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு பள்ளிக் குழந்தைகளுக்கு சிரமம் தந்து வருகின்றனர்.
இந் நிலையில் தங்களுக்கு அதிக மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்ல அனுமதி தராவிட்டால் திங்கள்கிழமை முதல் ஸ்டிரைக்கில் ஈடுபடுவோம் என்று இந்த வேன் உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர்.
12 மாணவ, மாணவிகளை மட்டும் ஏற்றிச் சென்றால் டீசல், டிரைவர் வாடகைக்கே கை காசைத் தான போட வேண்டி வரும், இந்தத் தொழிலையை நடத்த முடியாது என்கின்றனர்.
இந் நிலையில் சென்னை வட்டார போக்குவரத்து துறை இணை கமிஷனர்கள் குணசேகரன் (வடக்கு) பிராங்ளின் ஸ்டீபன் லூயிஸ் (தெற்கு) ஆகியோர் கூறுகையில்,
பள்ளி வாகனம் மட்டுமின்றி எல்லா வாகனங்களையும் நாங்கள் சோதனையிடுகிறோம். கடந்த 1 வாரத்தில் பள்ளிக்கூட மாணவ- மாணவிகளை ஏற்றிச் செல்லும் வேன் டிரைவர்களின் லைசென்சை சரி பார்த்ததில் சிலரிடம் லைசென்ஸ் கூட இல்லை.
குழந்தைகளின் உயிருடன் விளையாடும் இதை எப்படி அனுமதிப்பது?. அதனால்தான் நடவடிக்கை எடுத்து வருகிறோம். ரோட்டில் ஓடவே தகுதியில்லாத வாகனங்களில் குழந்தைகளை அழைத்துச் செல்வதை எப்படி அனுமதி்ப்பது?.
இதனால் பெர்மிட், எப்.சி. இல்லாத வண்டிகளைதான் பறிமுதல் செய்துள்ளோம். வேன் டிரைவர்களை பெற்றோர்களும் தட்டிக் கேட்க வேண்டும். முறையான லைசென்ஸ் இருக்கிறதா? என்று கேட்க வேண்டும்.
விதியை பின்பற்றாத வாகனங்களின் மீதுதான் நடவடிக்கை தொடரும் என்றனர்.