தமிழ்தான் ஆட்சி-பயிற்று மொழி; தொடர்புக்கு ஆங்கிலம்: கருணாநிதி
அதே நேரத்தில் உலகத் தொடர்புக்கு ஆங்கிலத்தையும் ஏற்றுக் கொண்டுள்ள நிலையிலும் மாற்றம் இல்லை என்று கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறவிருக்கின்ற நேரத்தில்; அண்ணா முதல்வராக இருந்து 1968ம் ஆண்டு நடத்திய இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டினையொட்டிய நிகழ்ச்சிகளை ஒருமுறை நினைவு கூர்ந்திட விரும்புகின்றேன்.
மாநாட்டின் தொடக்கமாக, 1-1-1968 அன்று மாலையில் அண்ணாவின் சிலை திறப்பு விழா நடைபெற்றது. பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த நான் அந்தச் சிலையை ஏற்றுக் கொண்டு நன்றியுரை ஆற்றினேன்.
அதே நாளில் சிலம்புச் செல்வர் எழுதிய "அவ்வையார்'' நூலினை நான் வெளியிட்டுப் பேசும்போது பயிற்றுமொழி பற்றிப் பேசியது தற்போதும் நினைவிலே கொள்ளத்தக்கது.
நான் பேசிய விவரம் வருமாறு:
தமிழ்நாட்டுக்கு தமிழா- ஆங்கிலமா என்பது முடிவெடுக்கப்பட்டுவிட்ட பிரச்சனையாகும். தமிழ்நாட்டில் ஆட்சிமொழியாக- பயிற்று மொழியாக தமிழ்தான் இருக்க வேண்டும் என்பது தமிழக அரசின் குறிக்கோள்.
இதில் சிறுதுளியும் மாற்றமில்லை. தொடர்பு மொழி என்கிற போதுதான் இந்தியா, ஆங்கிலமா என்ற பிரச்சனை எழுகிறது. தமிழக அரசு ஆங்கில மோகம் கொண்ட அரசல்ல என்பதையும், தமிழே அதன் குறிக்கோள் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்பு மொழியில்தான் தகராறு.
காஷ்மீர் வரை பஞ்சாப் வரை டெல்லி வரை எது தொடர்பு மொழி என்றால் இந்தி எனப்படுகிறது. ஆனால் நாமோ "யாதும் ஊரே யாவரும் கேளிர்'' என்ற அடிப்படைக் கருத்தின் வழி நடக்கின்ற காரணத்தால் அகில உலகத் தொடர்புக்கு ஆங்கிலமே என்கிறோம்.
ஆளுகின்ற மொழியாக ஆங்கிலத்தை ஏற்றுக் கொள்ளவில்லை, உலகத் தொடர்புக்காகவே அதை வரவேற்கிறோம். நாம் பிடித்திருப்பது தமிழ்ச் செங்கோலைத்தான் என்பதில் யாருக்கும் துளி ஐயமும் தேவையில்லை.
1968ம் ஆண்டில் நான் பேசிய இந்தக் கருத்துத்தான் இன்றளவும் நமது மொழிக் கொள்கையாக தொடர்ந்து வருகிறது. இதில் எந்த மாற்றமும் இப்போதும் இல்லை, எப்போதும் இல்லை.
அதே போல அந்த மாநாட்டையொட்டி தமிழ்ப் புலவர் குழு வரவேற்பு விழா ஒன்றும் அங்கே நடைபெற்றது. அதில் அண்ணா, ஒரு புலவரா என்ற வாதம் ஏற்பட்டது. அந்த விழாவிற்கு நான் தலைமை தாங்கினேன்.
தொடக்கத்தில் அண்ணா ஒரு புலவர் என்று குறிப்பிட்டேன். அடுத்து பேசிய அண்ணா- தான் புலவர் அல்ல என்று அவை அடக்கத்தோடு குறிப்பிட்டார்.
இருந்தாலும் நான் தொடர்ந்து, 'புலவருக்குரிய அடையாளம் அவை அடக்கம்'. அண்ணா அவை அடக்கத்தோடு தான் புலவர் அல்ல என்றார். அந்த அவை அடக்கமே அவரைப் புலவர் தான் என்று காட்டிவிட்டது. முதல்முறையாக அண்ணாவை நான் வெற்றி கொண்டேன் என்று நான் நகைச்சுவையாக குறிப்பிட்டபோது, அந்த அரங்கமே சிரித்து மகிழ்ந்ததும், அண்ணா சிறு குழந்தையைப் போல எழுந்து நின்று சிரித்ததும் என்றைக்கும் நீங்காமல் என் நினைவில் இருக்கும் காட்சி என்று கூறியுள்ளார் கருணாநிதி.