தனி கூர்காலாந்து-போடோலாந்து போராட்டங்கள் வெடித்தன!
டெல்லி & குவஹாத்தி: மேற்கு வங்க மாநிலத்தைப் பிரித்து கூர்க்காலாந்து அமைக்க வேண்டும் என்று கூர்க்கா ஜன்முக்த மோர்ச்சா கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை முன்னாள் பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் தலைமையிலான கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா தலைவர்கள் குழு சந்தித்து கோரிக்கை விடுத்தது.
ராஜஸ்தானைச் சேர்ந்தவரான ஜஸ்வந்த் சி்ங் தீவிர கூர்க்காலாந்து ஆதரவாளர் ஆவார். கடந்த மக்களவைத் தேர்தலில் அவர் கூர்க்கா சமூகத்தினர் அதிகம் வசிக்கும் மேற்கு வங்கத்தின் டார்ஜிலி்ங் தொகுதியில் இருந்து வென்று எம்பியானார்.
மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் கூர்க்கா இன மக்கள் நெடுங்காலமாகவே தனி மாநிலம் கோரி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
சுபாஷ் கெய்சிங் தலைமையில் மாபெரும் வன்முறைப் போராட்டங்கள் நடந்தன. இதையடுத்து டார்ஜிலிங் கூர்க்கா மலைப் பகுதி கவுன்சிலை அமைத்தது மேற்கு வங்கம். இந்த கவுன்சிலுக்கு பல அதிகாரங்கள் தரப்பட்டதையடுத்து போராட்டங்கள் தாற்காலிகமாக முடிவுக்கு வந்தாலும் தனி மாநில கோரிக்கை தொடர்கிறது.
தனி மாநில கோரிக்கைக்காக அமைக்கப்பட்ட கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா தான் இப் பகுதியில் எம்பி, எம்எல்ஏக்களின் வெற்றி தோல்வியை நிர்ணயித்து வருகிறது. கடந்த தேர்தலில் ஜஸ்வந்த் சிங்கின் வெற்றிக்கும் இந்த அமைப்பே முக்கிய காரணமாக அமைந்தது.
இந் நிலையில் தெலுங்கானா தனி மாநில அறிவிப்பையடுத்து கூர்க்காலாந்து மாநில கோரிக்கை வலுத்துள்ளது. நேற்று ப.சிதம்பரத்தை சந்தித்த இந்த அமைப்பினர் இன்று முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டங்களை அறிவித்துள்ளனர்.
இதனால் வன்முறை வெடிக்கலாம் என்ற அச்சம் பரவியுள்ளதால் டார்ஜிலிங்கில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அவசர அவசரமாக வெளியேற ஆரம்பித்துள்ளனர்.
போடோலாந்து:
அதே போல அஸ்ஸாம் மாநிலத்தைப் பிரித்து போடாலாந்து அமைக்கக் கோரி அங்கு போராட்டங்கள் வெடித்துள்ளன.
போடோ இன மக்கள் தங்களுக்கு தனி மாநிலம் கோரி நெடுங்காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போது தெலுங்கானா கோரிக்கை ஏற்கப்படடுள்ளதால் போடோலாந்து கோரிக்கை வலுவாகியுள்ளது.