காதலனுடன் மணப்பெண் ஓட்டம்-மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டினார் தங்கை
நாகர்கோவில்: திருமண மண்டபத்தில் இருந்து மணப்பெண் காதலனுடன் ஓடிப்போனதால், மணப்பெண்ணின் தங்கையை மாப்பிள்ளை மணந்தார்.
மார்த்தாண்டம் கொடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் குழித்துறை நகராட்சியில் ஊழியராக உள்ளார். இவரது மகள் சுமிதா. இவருக்கும், திருவனந்தபுரத்தை சேர்ந்த ஷாஜி என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
அதன்படி மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடக்க இருந்தது. திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்தது. நேற்று அதிகாலை மணப்பெண்ணை அலங்கரிகக அவரது தோழிகள் தேடினர். ஆனால் சுமிதாவை காணவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது சுமிதா அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்ததும், இரவோடு இரவாக அவரோடு ஓட்டம் பிடித்ததும் தெரிய வந்தது. சுமிதாவின் பெற்றோர் மேலும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து மணமகன் வீட்டுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் அதற்குள் திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு வந்து சேர்ந்து விட்டனர்.
இருவீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஒருவழியாக பேசி சுமிதாவின் தங்கையை மணப்பெண்ணாக்கினர். இதற்கு இருவரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களது திருமணம் நடந்தது.