பணம் கொடுத்தால் தமிழர்கள் ஓட்டுப் போடுவார்கள் என்ற அவப்பெயரை ஏற்படுத்தி விட்டது திமுக - ராமராஜன்
வந்தவாசி: பணம் கொடுத்தால் தமிழர்கள் ஓட்டுப் போடுவார்கள் என்ற மோசமான பெயரை தமிழக மக்களுக்கு திமுகவினர் ஏற்படுத்தி விட்டனர் என்று சாடியுள்ளார் அதிமுக பேச்சாளரும், நடிகருமான ராமராஜன்.
வந்தவாசி அதிமுக வேட்பாளர் பி.முனுசாமியை ஆதரித்து நேற்று ராமராஜன் 16 கிராமங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்தார்.
செய்யாறு தாலுகா அனக்காவூர் ஒன்றியத்தில் அனக்காவூர், விளாரிப்பட்டு, நல்லாளம், கோவிலூர், முளகிரிபட்டு,சித்தாமூர் உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்ற அவரது பேச்சுக்கு பிரசாரத்தின்போது பெரும் வரவேற்பு ஏற்பட்டது.
ராமராஜன் பேசுகையில், தமிழகத்தில் தி.மு.க ஆட்சியில் விலைவாசி உயர்ந்து நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ரேஷன் கடையில் 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி கொடுத்தால் மட்டும் போதுமா? மற்ற பொருட்களின் விலை விண்ணை தொடுகிறது.
தி.மு.க.வின் இலவச திட்டங்களால் மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை. ஆனால், மாணவ, மாணவிகளுக்கு கல்வித் தரம் உயர இலவச கம்ப்யூட்டர் தருவேன் என ஜெயலலிதா கூறினார்.
பணம் கொடுத்தால் போதும் தமிழர்கள் ஓட்டு போடுவார்கள் என்ற மோசமான பெயரை தமிழக மக்களுக்கு தி.மு.க. ஏற்படுத்தி வருகிறது.
அ.தி.மு.க.விடம் தோற்று விடுவோம் என பயந்துதான் தி.மு.க.வினர் ஓட்டுக்கு பணம் கொடுக்கின்றனர். இதுவே அ.தி.மு.க.விற்கு வெற்றிதான். ஜனநாயகம் காப்பாற்ற அ.தி.மு.க. வேட்பாளர் பி.முனுசாமிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார் ராமராஜன்.












Click it and Unblock the Notifications