சட்டம், திட்டம்- 'பன்ச் டயலாக்' பேசும் ஜி.கே.வாசன்
திருவண்ணாமலை: அதிமுக சட்டங்களை வைத்து ஆட்சி நடத்தியது. ஆனால், காங்கிரஸ்-திமுக நல்ல திட்டங்களை வைத்து ஆட்சி நடத்துகிறது என்று மத்திய அமைச்சர் வாசன் பேசினார்.
வந்தவாசி சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கமலக்கண்ணனை ஆதரித்து மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தார்.
அவர் பேசுகையில், மத்தியில் மன்மோகன் தலைமையிலும், தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலும் நல்லாட்சி நடக்கிறது. இந்த இரு அரசுகள் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி மக்கள் வாழ்க்கையை மேம்படுத்துகின்றன.
கடந்த நான்கு மாதம் முன்பு நடந்த இடைத்தேர்தலில் ஜனநாயகம் இல்லை என்று கூறி அதிமுக போட்டியிடாமல் ஒதுங்கியது. ஆனால் இப்போது வலிய வந்து போட்டியிடுகிறார்கள்.
இனியும் ஒதுங்கியிருந்தால் மக்கள் நம்மை புறக்கணித்துவிடுவர் என்ற பயத்தில் தான் தற்போது இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். அவர்களை பொதுமக்கள் தங்கள் ஓட்டுகள் மூலம் புறக்கணிக்க வேண்டும்.
எஸ்மா, டெஸ்மா, சட்டங்கள் மூலம் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியவர் ஜெயலலிதா. நெசவாளர்களை கஞ்சி தொட்டியை நாடும் நிலைக்கு ஆளாக்கியவர் ஜெயலலிதா.
அதிமுக சட்டங்களை முன் வைத்து ஆட்சி நடத்தியது. ஆனால், காங்கிரஸ்-திமுகநல்ல திட்டங்களை முன் வைத்து ஆட்சி நடத்துகிறது என்றார்.












Click it and Unblock the Notifications