'சோபியான்': சிபிஐயை கண்டித்து ஸ்ரீநகரில் பந்த்
ஸ்ரீநகர்: சோபியான் கொலை வழக்கு தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட சிபிஐ அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் பந்த் நடப்பதால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் கற்பழித்துக் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நிலோபர் ஜான், அவரது மைத்துனி ஆசியா ஜான் ஆகிய இருவரும் நீரில் மூழ்கி தான் இறந்தனர் என சிபிஐநேற்று தனது விசாரணை அறிக்கையில் தெரிவி்த்திருந்தது.
இருவரையும் பாதுகாப்புப் படையினர் கற்பழித்துக் கொலை செய்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றும் இவ்விஷயத்தி்ல் பொய் சாட்சி கூறியதாக மருத்துவர்கள், வக்கீல்கள் உள்ளிட்ட 13 மீது குற்றச்சாட்டையும் சிபிஐ பதிவு செய்தது.
ஆனால் சி.பி.ஐ விசாரணை அறிக்கைக்கு பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சோபியான் கொலைகள் தொடர்பாக விசாரணை முறைப்படி நடக்கவில்லை. உண்மையை மறைத்து தவறு செய்தவர்களை காபாற்றப்படுவதாகவும், அப்பாவிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர் என்றும் நிலோபரின் உறவினர்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந் நிலையில், சிபிஐ அறிக்கையை கண்டித்து ஸ்ரீநகரில் மஜ்லித்-இ-முஷாவரத் என்ற அமைப்பு இன்று பந்த் நடந்த அழைப்பு விடுத்துள்ளது.
இதனால் இன்று ஸ்ரீநகர் மற்றும் முக்கிய நகரங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹுரியத் தலைவர்கள் சிலரை ஏற்கனவே போலீசார் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். இதனால் ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.