அமெரிக்க உளவாளியாக இருந்த ஹெட்லி!
இதுகுறித்து மெக்லாட்சி என்ற செய்தித் தாள் வெளியிட்டுளள செய்தி..
1988ம் ஆண்டு போதைப் பொருள் வைத்திருந்ததாக பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் வைத்து அமெரிக்க போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் ஹெட்லி.
பிலடெல்பியா போவதற்காக காத்திருந்தபோது அவர் பிடிக்கப்பட்டார். அவரிடம் இருந்த சூட்கேஸில் 2 கிலோ ஹெராயின் போதைப் பொருள் இருந்தது. பாகிஸ்தானிலிருந்து இதைக் கொண்டு வந்ததாக அவர் தெரிவித்தார்.
அப்போது தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தனக்கு ஹெராயின் கொடுத்த ஏஜென்டுகளை அவர் போட்டுக் கொடுத்தார்.
மேலும், அமெரிக்க போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் உளவாளியாக செயல்படவும் முன்வந்தார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் அவர் உளவாளியாக செயல்பட்டார்.
90களில் பாகிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கு ஹெராயின் கடத்தப்படுவது வெகுவாக குறைய ஹெட்லிதான் முக்கிய காரணமாக இருந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஹெட்லியுடனான தொடர்பை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு நிறுத்திக் கொண்டது. அவரை சுதந்திரமாக நடமாட அனுமதித்தது.
அதன் பின்னர் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தார் ஹெட்லி.
ஹெட்லி இரட்டை வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். மாலை நேரங்களில் அவர் பார்களில் கழித்து வந்துள்ளார். அவர் அதிகம் விரும்பிப் போகும் பாராக கைபர் பாஸ் இருந்தது. இது வேறு யாருடைய பாருமல்ல, ஹெட்லியின் தாயார் நடத்தி வந்த பாரேதான்.
80களில் பிலடெல்பியாவைச் சேர்ந்த பெண்ணுடன் ஹெட்லிக்கு திருமணம் நடந்தது. தனது பாரில் வைத்துதான் அந்தப் பெண்ணைச் சந்தித்தார் ஹெட்லி. ஹெட்லியின் நிறத்தைப் பார்த்து அந்தப் பெண் காதல் கொண்டார்.
ஒரு கட்டத்தில் ஹெராயினுக்கு அடிமையானார் ஹெட்லி. 1988ம் ஆண்டு பிராங்பர்ட்டில் பிடிபட்ட அவர் 1997ம் ஆண்டு நியூயார்க்கில் பிடிபட்டார். இருமுறையும் அவருக்கு சாதாரண தண்டனையே கிடைத்தது. இதற்குக் காரணம், தனக்கு ஹெராயின் கொடுத்தவர்களை அவர் மாட்டி விட்டதாலாம்.
அமெரிக்காவி்ல் பாக். தீவிரவாதிக்கு சிறை:
இந் நிலையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்ட இரண்டு பேருக்கு தலா 13 மற்றும் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த சயீது ஹாரிஸ் அகமது (25) மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த எசானுல் இஸ்லாம் சாதிக் (23) ஆகிய இருவரும் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள்.
சயீது ஹாரிஸ் அட்லாண்டாவிலும், சாதிக் ரோஸ்வெல் பகுதியிலும் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருப்பதாக கைது செய்யப்பட்டனர்.
அமெரிக்கா மற்றும் பிற பகுதிகளில் தாக்குதல் நடத்தி தீவிரவாத அமைப்பு தீட்டிய சதி திட்டங்களுக்கு இவர்கள் உதவி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.
டேவிட் கோல்மென், ராணா போலவே இவர்களை கைது செய்யப்பட்ட இவர்கள் மீது எஃப்.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தற்போது அட்லாண்டாவில் உள்ள கோர்ட் மூலம் தண்டனை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.