இடைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகளுக்குத் தடை
சென்னை: இடைத் தேர்தல் நடக்கும் வந்தவாசி, திருச்செந்தூர் தொகுதிகளில் கருத்துக் கணிப்பு நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இந்த தொகுதிகளில் டிசம்பர் 19ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
இடைத் தேர்தல் குறித்து கருத்துக் கணிப்பு நடத்தவும், அதன் முடிவுகளை 17ம் தேதி மாலை 5 மணி முதல் வாக்குப் பதிவு நாளான 19ம் தேதி மாலை 5 மணி வரை வெளியிடவும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான மாதிரி வாக்காளர் பட்டியலை வெளியிடுவதோ அல்லது புவியியல் ரீதியான புள்ளி விவர சேகரிப்பு அல்லது சர்வேக்களை நடத்தி முடிவுகளை வெளியிடவோ கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து ஏற்பாடுகளும் தயார்:
இந் நிலையில் இரு தொகுதிகளிலும் இடைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. வரும் 17ம் தேதி மாலை 5 மணிக்குள் வெளியாட்கள் வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இடைத் தேர்தல் வாக்குபதிவு காலை 8 மணிக்கு துவக்கி மாலை 5 மணிக்கு முடிகிறது. வாக்கு பதிவு துவங்கியது முதல் முடியும் வரை வீடியோவில் பதிவு செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் தேர்தல் ஆணையம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்தலில் வெப்கேமராக்களும் பயன்படுத்தப்படுகின்றன.
இதற்காக தேர்தல் ஆணையம் 400 வெப் கேமராக்களை அனுப்பி வைத்துள்ளது. வரும் 16ம் தேதியன்று மின்னனி வாக்குபதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி வேட்பாளர்கள் முன்னிலையில் நடக்கிறது.
தேர்தல் பணியாளர்களுக்கான இண்டாம் கட்ட பயிற்சி முகாம் இன்றும், மூன்றாம் கட்ட பயிற்சி முகாம் 17ம் தேதியும் நடக்கிறது. இறுதி கட்ட பயிற்சி முகாமின் போது எந்த, எந்த வாக்கு சாவடிகளில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பணியானையும், சிம்கார்டுகலும் பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. தேர்தல் மேற்பார்வை பணியில் ஈடுபட இருக்கும் 17 மண்டல அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் நேற்று நடந்தது.
17ம் தேதி மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடிவடைகிறது. அன்று மாலைக்குள் வெளியாட்கள் தொகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.