புயல் மேலும் வலுவிழந்தது-கன மழை தொடர்கிறது
சென்னை: வார்டு புயல் மேலும் வலுவிழந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இருப்பினும் மேலும் ஒரு நாளைக்கு மழை நீடிக்கும் என அது அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக தமிழக கடல் பகுதியில் கடந்த ஒரு வாரமாக பலத்த காற்று வீசுகிறது.
55 முதல் 75 கி.மீ வேகத்தில் கடலில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.
இதற்கேற்ப சென்னையில் மெரீனா, எண்ணூர், திருவொற்றியூர், காசிமேடு பகுதியிகளில் கடந்த சில தினங்களாக கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டது. இன்று அலைகள் பல அடி உயரத்தில் எழும்பி சீறிப் பாய்ந்தன.
பட்டினப்பாக்கம் மீனவர் குடியிருப்பு பகுதியில் கடல் நீர் புகுந்தது. பெசன்ட் நகர், திருவான் மியூர் பகுதியிலும் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது.
கடலோரம் உள்ள சில குடியிருப்பு பகுதிகளில் கடல்நீர் புகுந்துள்ளது. கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் இன்று 7வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
மழை நிலவரம்:
இதற்கிடையே, இலங்கை அருகே நிலைகொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் பலவீனமடைந்துள்ளது. இருப்பினும் அது தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பதால் மேலும் ஒரு நாள் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் நாளை மழை குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வார்டு' புயல் இலங்கை திரிகோண மலையில் கரையை கடந்து பலம் இழந்தது. அது தீவிர காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி இலங்கை அருகே நிலை கொண்டுள்ளது.
இன்று தமிழகத்திலேயே அதிகபட்சமாக மயிலாடுதுறையில் 15 செமீ மழை பெய்தது.
அதேபோல வல்லம் 14, நீடாமங்கலம் 13, திருத்துறைப்பூண்டி, காரைக்கால், நாகை, தொழுதூரில் தலா 12 செமீ மழை பெய்தது.












Click it and Unblock the Notifications