ஓட்டைபோட்டு நகைக்கடையில் ரூ. 25 லட்சம் கொள்ளை
சென்னை: நகைக்கடையின் மேற்கூரையில் துளைபோட்டு ரூ.25 லட்சம் மதிப்பிலான நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
அண்ணாநகர் மேற்கு கலெக்டர் நகரில் எம்.ஜி.தங்க மாளிகை என்ற நகை கடை உள்ளது. சவுகார்பேட்டையை சேர்ந்த உத்தம்சந்த, மகேஷ்கர் ஆகியோர் இந்த நகை கடையை நடத்தி வருகிறார்கள்.
வழக்கம் போல் இன்று காலை கடையை திறந்தனர். உள்ளே நகைகள் சிதறி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சுவற்றில் துளைபோட்டு கொள்ளையர்கள் நகை கடைக்குள் நுழைந்து தங்க நகைகள், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
ஒன்றரை கிலோ தங்கமும், 20 கிலோ வெள்ளியும் கொள்ளை போனது. இதன் மதிப்பு ரூ.25 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
நகைக்கடை அருகே சிமெண்ட் சிலாப் விற்பனை கடை உள்ளது. அங்கு சிமெண்டு சிலாப்புகள் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும். கொள்ளையர்கள் சிமெண்ட் சிலாப்பை எடுத்து விட்டு நகை கடை சுவற்றில் துளை போட்டு உள்ளே சென்று நுழைந்துள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து இருவரும் போலீசில் புகார் தெரிவித்தனர். திருமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.