ஆந்திராவில் தொடரும் போராட்டம்- திருப்பூர் ஜவுளித் தொழில் பாதிப்பு
சென்னை: தெலுங்கானா தொடர்பாக ஆந்திராவில் தொடர்ந்து போராட்டங்கள் நிலவி வருவதால் ஆந்திரா மாநிலம் வழியாக சரக்கு வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பூர் ஜவுளித் தொழிலும், ஈரோடு புளி வணிகமும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.
பனியன் நகரான திருப்பூரில் ஆயத்த ஆடைத் தயாரிப்பாளர்களுக்கு ஆந்திரப் போராட்டம் பெரும் சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரிலிருந்து கிளம்பிய சரகுக்குகள் உரிய ஊர்களுக்குப் போய்ச் சேர முடியவில்லை. காரணம், ஆந்திராவின் வழியாக லாரிகள் செல்ல முடியாத நிலை காணப்படுவதே.
இதனால் சரக்கு லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. புதிய புக்கிங்குகளை லாரி நிறுவனங்கள் நிறுத்தி வைத்து விட்டதால் ஆயத்த ஆடை நிறுவனங்களில் தயாரிக்கப்பட்ட உடைகள் குவிந்து கொண்டிருக்கின்றன.
அதேபோல ஈரோட்டைச் சேர்ந்த புளி வியாபாரிகளும் ஆந்திர போராட்டத்தால் சரக்குகளை அனுப்ப முடியாமல் தத்தளித்து வருகின்றனர்.
மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உ.பி. ஆகிய மாநிலங்களுக்கு ஆந்திரா வழியாகத்தான் போயாக வேண்டும். ஆனால் அங்கு நிலைமை சரியில்லாததால் சரக்கு லாரிகளை இயக்க லாரி டிரான்ஸ்போர்ட்டர்கள் மறுத்து வருகின்றன்.
இதனால் புளியின் விலை வெகுவாக குறைந்து விட்டதாம். இதனால் புளி வியாபாரிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
ஆந்திர போராட்டம் வெடிப்பதற்கு முன்பு டன் புளி விலை ரூ. 13,470 ஆக இருந்தது. ஆனால் தற்போது விலை ரூ. 11,000 ஆக குறைந்து விட்டது.
தென்னிந்தியாவிலிருந்து நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களுக்குச் செல்ல ஹைதராபாத்தான் முக்கிய மையப் புள்ளியாக உள்ளது. ஹைதராபாத்தைத் தொடாமல் எந்த வாகனமும் செல்ல முடியாது.
ஆனால் தற்போது ஹைதராபாத்தில் தான் போராட்டம் தொடர்ந்து நிலவி வருவதால் லாரிகள் போக்குவரத்து கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால் பல்வேறு தொழில்களும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. பெரும் இழப்புகளும் ஏற்பட்டு வருகின்ரன.
பல்லடம், சோமனூர், திருப்பூர் பனியன் நிறுவனங்களிலிருந்து தினசரி 100 லாரிகள் வட இந்தியாவுக்குச் செல்வது வழக்கம். ஒவ்வொரு லாரியிலும் 8 டன் முதல் 16 டன் எடை கொண்ட சரக்குகள் எடுத்துச் செல்லப்படும்.
ஆனால் தெலுங்கானா விவகாரத்தால், இது பாதிப்படைந்துள்ளது.
இதுகுறித்து திருப்பூர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சி.என்.ராமசாமி கூறுகையில், ஹைதராபாத் நெடுஞ்சாலை வழியாகவும் போக முடியவில்லை. அதைத் தாண்டி வேறு மார்க்கத்திலும் போக முடியாத நிலை நிலவுகிறது என்றார்.
அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆர்.சுகுமாரன் கூறுகையில், அனந்தப்பூர், சித்தூர், கடப்பா, நெல்லூர், திருப்பதி மாவட்டங்களில் சாலைப் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது.
மற்ற பகுதிகளிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருவதால் அங்கும் போக்குவரத்து சுமூகமாக இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications