தெலுங்கானா விவகாரத்தால் அமளி - லோக்சபா ஒத்திவைப்பு
டெல்லி: தனி தெலுங்கானா மாநில அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளைச் சேர்ந்த தெலுங்குதேசம் எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.
இன்று காலை லோக்சபாவில் கேள்வி நேரம் தொடங்கியதும் தெலுங்குதேசம் எம்.பிக்கள் எழுந்து, ஆந்திராவைப் பிரிக்கக் கூடாது என்ற கோரிக்கை அடங்கிய தட்டிகளை ஏந்தியபடி கோஷம் எழுப்பத் தொடங்கினர். ஒருங்கிணைந்த ஆந்திராவே நீடிக்க வேண்டும் என்று அதில் எழுதப்பட்டிருந்தது.
மேலும், அவையின் மையப் பகுதிக்குச் சென்று அவர்கள் முழக்கமிட ஆரம்பித்தனர்.
கே.நாராயண ராவ், வேணுகோபால ரெட்டி, கிருஷ்டப்பா, சிவபிரசாத் ஆகிய நான்கு எம்.பிக்களும் போட்ட கோஷத்தால், அவை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
அவர்களை இருக்கைக்குத் திரும்பிச் செல்லுமாறு சபாநாயகர் மீரா குமார் பல முறை கோரிக்கை விடுத்தும் அவர்கள் கேட்கவில்லை.
அவையின் புனிதத்தைக் கெடுக்கும் வகையில் தட்டிகளை ஏந்தக் கூடாது என்றும் மீரா குமார் கண்டித்தார்.
அப்போது தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பிக்கள் திரண்டு, வந்து ஜெய் தெலுங்கானா என்று கோரி கோஷமிட்டதால் அவையில் குழப்பம் ஏற்பட்டது.
இந்த அமளியால் அவையை ஒத்திவைத்தார் சபாநாயகர் மீரா குமார்.
இன்றைய போராட்டத்தின்போது கட்சிப் பாகுபாடு இல்லாமல், ஆந்திரா மற்றும் தெலுங்கானா பிராந்திய எம்.பிக்கள் பிளவுபட்டு நின்றது தெள்ளத் தெளிவாக தெரிந்தது.
இதனால் தெலுங்கானா பகுதி காங்கிரஸ் எம்.பிக்கள் கோஷமிட்டபோது பிற பகுதி காங்கிரஸ் எம்.பிக்கள் அமைதியாக அமர்ந்திருந்தனர். அதேபோல ஆந்திரா பகுதியைச் சேர்ந்த தெலுங்கு தேசம் எம்.பிக்கள் பிரச்சினை கிளப்பியபோது தெலுங்கானா எம்.பிக்கள் அமைதியாக உட்கார்ந்திருந்தனர்.
இதனால் ஆந்திராவில் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் பிராந்திய ரீதியாக பிளவுபட்டிருப்பது உறுதியாகியுள்ளது.