இந்தியா எச்சரித்ததால் பொன்சேகா நீக்கப்படவில்லை: இலங்கை அமைச்சர்
இலங்கையில் ராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு இந்திய பிரதமர் மன்மோகன்சிங் தான் காரணம் என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்தன.
இலங்கையில் ராணுவப் புரட்சி ஏற்படும் அபாயம் இருப்பதாக மன்மோகன்சிங் எச்சரித்த பின்னர் தான் பொன்சேகா பதவி நீக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாயின.
இதுகுறித்து இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் கெஹலியா ராம்புக்வெல்லா அளித்துள்ள விளக்கம்:
இலங்கையில் இறையாண்மை கொண்ட ஒரு அரசு உள்ளது. ராணுவத்தின் நிர்வாக அதிகாரங்கள் எல்லாம் அதிபரிடம் தான் உள்ளன. ராணுவ அதிகாரிகள் நியமனங்களை எல்லாம் அவர் தான் கையாள்கிறார். ராணுவ அதிகாரிகள் நீக்கம் அல்லது பதவி உயர்வு எல்லாம் சில பாரம்பரிய நடைமுறைகளின் அடிப்படையில் நடைபெறுகிறது.
அண்டை நாடுகள் அனைத்துடனும் நாங்கள் சுமுகமான உறவு கொண்டுள்ளோம். அண்டை நாடுகள் ஆலோசனை தந்தால், அதை வரவேற்போம். ஆனால், எங்கள் நாட்டில் உள்ள அமைப்பு முறை மற்றும் நிர்வாக முறைகளின் அடிப்படையில் தான் முடிவுகள் எடுப்போம்.
மற்ற நாடுகளின் உத்தரவின் பேரில் எந்த முடிவையும் எடுக்க மாட்டோம். இந்திய பிரதமர் மன்மோகன் கேட்டுக் கொண்டதால் தான், ராணுவ தளபதி பதவியில் இருந்து சரத் பொன்சேகா நீக்கப்பட்டார் எனக் கூறப்படுவது தவறான தகவல்" என்று கூறினார்.