வீட்டுக்குள் புகுந்து அப்பாவிப் பெண்ணைச் சுட்டுக் கொன்ற தீவிரவாதி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் தீவிரவாதி ஒருவன் வீட்டுக்குள் புகுந்து பெண்ணை சுட்டுக்கொன்றான்.
காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது மக்பூல் என்பவர் தனது வீட்டில் மகள்களுடன் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென முகமூடியணிந்த ஒருவன் ஆயுதங்களுடன் வீட்டுக்குள் நுழைந்தான்.
அங்கிருந்த பெண்களின் பெயர்களை வரிசையாக கூறுமாறு மிரட்டினான். துப்பாக்கியுடன் மிரட்டியதால், தன் மகள்களின் பெயர்களை மக்பூல் வரிசையாக கூறினார்.
ஒரு மகளின் பெயரை ஷெர்ஸா அக்தர் என்று சொன்னபோது, அந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அந்த ஆசாமி தப்பியோடி விட்டான். 21 வயதே ஆன ஷெர்ஸா அக்தர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையை தொடங்கினர். இந்த வெறிச்செயலை நடத்தியது தீவிரவாத குழுவைச் சேர்ந்தவன் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
வீட்டுக்குள்ளையே புகுந்து அப்பாவிப் பெண்ணை தீவிரவாதி சுட்டுக் கொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.