காதல் ஜோடி காவல்துறையிடம் தஞ்சம்
மதுரை: வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்ட காதலர்கள் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கருங்குளத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் சரவணக் குமார் (28). இவர் மூணாறில் உள்ள ஒரு உணவு விடுதியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
கருங்குளத்தைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரது மகள் புனித நிர்மலா. இவர் கல்லூரி ஒன்றில் படித்து வருகின்றார்.
மாணவி புனித நிர்மலாவுக்கும், சரவணக்குமாருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இதற்கு இரு வீட்டார் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில் வீட்டைவிட்டு காதலர்கள் இருவரும் வெளியேறி திண்டுக்கல்லில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 14ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
மதுரையில் உள்ள தனது நண்பன் வீட்டுக்கு மனைவியோடு சரவணக்குமார் வந்துள்ளார். அப்போது மாட்டுத்தாவணி அருகில் ஒரு கும்பல், தம்பதியினரைக் கடத்த முயன்றுள்ளனர்.
அவர்களிடம் இருந்து தப்பி வந்த இருவரும் மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications