அதிமுக தொண்டர்களுக்கு ஜெயலலிதா அறிவுரை
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சேலம் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் பணியாற்றிவிட்டு வாகனம் மூலம் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, எதிரே வந்த லாரி மோதியதன் காரணமாக அம்மாபேட்டை பகுதி அவைத் தலைவர் கே.தங்கவேல், சம்பவ இடத்திலேயே மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டும்,
இந்த விபத்தில் மாவட்ட துணைச் செயலாளர் வி.பன்னீர் செல்வம், அம்மாபேட்டை பகுதிச் செயலாளர் எல்.வி. பிரகாஷ், பகுதி எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் ஜெ.மாணிக்கம், பகுதி எம்.ஜி.ஆர், இளைஞர் அணி துணைத் தலைவர் ஜெ. ஜானகிராமன் மற்றும் ஓட்டுனர் கே.முகமது பாரூக் ஆகியோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற செய்தி கேட்டும், என் மனம் துடிதுடித்தது.
என் உயிரினும் மேலான எனதருமைக் உடன்பிறப்புகள் வாகனங்களில் பயணம் செய்யும் போது மிகுந்த பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் செல்ல வேண்டும் என்று நான் அடிக்கடி வலியுறுத்தி வந்தபோதிலும், இது போன்ற விரும்பத்தகாத விபத்துகள் நிகழ்ந்து, விலை மதிக்க முடியாத உடன்பிறப்புகள் உயிரிழப்பதும். காயமடைவதும், மேலும் என்னை வேதனையில் ஆழ்த்துகிறது.
உடன்பிறப்புகள் சாலைகளில் பயணம் செய்யும்போது மிகுந்த பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் செல்ல வேண்டும் என்று நான் மீண்டும் அன்புக்கட்டளை இடுகிறேன்.
வாகன விபத்தில் உயிரிழந்த அடலேறு தங்கவேல் அவர்களது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது குடும்பத்திற்கு அதிமுக சார்பில் குடும்ப நல நிதியாக ரூ.50,000 வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இந்த விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுகவினர் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப, எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
எம்ஜிஆர் சமாதியில் உறுதிமொழி:
இந் நிலையில் அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆர் நம்மை ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்தி விட்டு அமரர் ஆகிய நாள் 24.12.1987. அவரது 22வது ஆண்டு நினைவு நாளான 24.12.2009 அன்று காலை 10.30 மணிக்கு சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினை விடத்தில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார்.
அதைத் தொடர்ந்து அவரது நினைவிட வளாகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் தலைமைக் கழக நிர்வாகிகளும், கட்சி நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்களும், கட்சியின் அனைத்துப் பிரிவு நிர்வாகிகளும் கலந்து கொள்வார்கள்.
கட்சி, எம்ஜிஆர் மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்ஜிஆர் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற் சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி உட்பட கட்சியின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதி களும், கட்சித் தொண்டர்களும் பெருந்திரளாகக் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.