திருச்செந்தூரில் விறுவிறு வாக்குப் பதிவு- அமைதியாக முடிந்தது
திருச்செந்தூர்: எந்தவித பிரச்சினையும் இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடந்து வந்த திருச்செந்தூர் வாக்குப் பதிவு மாலை 5 மணியுடன் முடிவடைந்தது.
மாலை 5 மணி நிலவரப்படி வாக்குப் பதிவு சதவீதம் 80 சதவீதத்தைத் தாண்டியிருப்பதாக தெரிகிறது. சரியான வாக்குப் பதிவு சதவீதம் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
திருச்செந்தூர் தொகுதியில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. வழக்கமாக காலை 7 மணிக்குத்தான் வாக்குப் பதிவு தொடங்கும். ஆனால் இந்த முறை தேர்தல் ஆணைய உத்தரவுப்படி ஒரு மணி நேரம் கழித்து தொடங்கியுள்ளது. மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது.
இந்தத் தொகுதியில் 196 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. பல வாக்குச் சாவடிகளில் அவை திறக்கப்படும் முன்பே மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்றிருந்தனர்.
வாக்குச் சாவடிகளில் வெப் காமிராக்கள் பொருத்தப்பட்டு நடவடிக்கைகள் வெப் காமிரா மூலம் படம் பிடிக்கப்பட்டன. வாக்காளர்களின் புகைப்படமும் எடுக்கப்பட்டது. வாக்குச் சாவடி நுழைவாயிலில் துணை ராணுவத்தினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.
சில பகுதிகளில் கள்ள ஓட்டு போடுவதற்கு ஆட்கள் வாகனங்கள் மூலம் ஏற்றி வரப்படுகின்றனர் என்ற ரகசிய தகவலை தொடர்ந்து பல்வேறு பகுதியில் போலீஸ் வாகன சோதனை போட்டது. அப்போது ஆறுமுகநேரி நோக்கி வந்த 2 சொகுசு பேருந்துகளை மதுரை ரூரல் டிஎஸ்பி தலைமையில் போலீசார் மடக்கி சோதனை போட்டனர்.
அப்போது அப்பேருந்தில் இருந்தவர்கள் வெளியூரி்ல் இருந்து ஓட்டு போட சொந்த ஊர் வந்ததாக தெரிவித்தனர். அவர்களிடம் வாக்களி்க்க அடையாள அட்டை உள்ளிட்ட ஏதும் இல்லாததால் சென்னையை சேர்ந்த 43 பேர், செங்கல்பட்டை சேர்ந்த 19 பேர், திருச்சியை சேர்ந்த 34 பேர், 9 பெண்கள் உள்பட 96 பேரை அப்பேருந்தில் ஏற்றி ஆறுமுகநேரி காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தத் தொகுதியில் திமுக வேட்பாளராக அனிதா ராதாகிருஷ்ணனும், அதிமுக வேட்பாளராக அம்மன் நாராயணனும், தேமுதிக வேட்பாளராக கோமதி கணேசனும் களம் இறங்கியுள்ளனர். இத்தொகுதியில் மும்முனை போட்டு நிலவுவதுடன் 22 சுயேட்சைகளும் களத்தில் உள்ளனர்.
திருசெந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று காலை 8.30 மணிக்கு தண்டுபத்து பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் உள்ள வாக்கு சாவடியில் ஓட்டு போட்டார்.
அதி்முக வேட்பாளர் அம்மன் நாராயணன் நைனாபத்து பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளியில் ஓட்டு போட்டார். தேமுதிக வேட்பாளர் கோமதி கணேசன் ஆறுமுகநேரி இந்து துவக்கப்பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் ஓட்டு போட்டார்.
காலை முதலே அனைத்து வாக்குச் சாவடிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடந்தது. பெரிய அளவில் வன்முறையோ, மோதலோ நடக்கவில்லை.
தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
முன்னாள் எம்எல்ஏ கைது:
இதற்கிடையே, திருச்செந்தூரில் நேற்று தேர்தல் பார்வையாளர் வீரேந்திரகுமார் மீனா லாட்ஜ்களில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது ஒரு தனியார் விடுதியில் விருதுநகர் முன்னாள் எம்எல்ஏ சீனிவாசன் தங்கியிருந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
அனிதா, கோமதி, அம்மன் பேட்டி..
திருச்செந்தூர் தொகுதியில் வாக்களித்த பின்னர் திமுக, அதிமுக உள்ளிட்ட வேட்பாளர்கள் பேட்டியளித்தனர்.
அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகையில், முதல்வர் கருணாநிதி அரசின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் அனைத்து மக்களும் காலையிலேயே திரண்டு வந்து ஆர்வமாக வாக்களிக்கின்றனர். மற்ற இடைத் தேர்தலை விட இந்த இடைத் தேர்தலில் கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றார்.
அதிமுக வேட்பாளர் அம்மன் நாராயணன் கூறுகையில், திருச்செந்தூர் தொகுதியில் ஜெயலலிதாவின் சுறறு பயணத்திற்கு பிறகு மககள் மத்தியில் அதிக செல்வாக்கு ஏற்பட்டுள்ளது. உயர்ந்து வரும் விலைவாசியில் மக்கள் அதிர்ந்து போய் உள்ளனர். துரோகமா, விசுவாசமா, என்பதற்காகதான் இந்த தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வெற்றிக்கனியை ஜெயலலிதாவின் காலடியில் சமர்ப்பிப்பேன் என்றார்.
தேமுதிக வேட்பாளர் கோமதி கணேசன் கூறுகையில், மக்கள் பெரும் மாற்றத்தை விரும்புகின்றனர் என்பதை இந்த தேர்தல் முடிவு காட்டும். விஜயகாந்த், பிரேமலதா ஆகியோரின் பிரசாரத்தில் இதை உணர முடிந்தது. இந்த தேர்தலில் நிச்சயம் தேமுதிக வியக்கத்தக்க சாதனை புரியும் என்றார்.












Click it and Unblock the Notifications