தஞ்சாவூர் அருகே ரவுடி வெட்டிப் படுகொலை
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே இன்று பிரபல ரவுடி வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது உடல் வாய்க்காலில் போட்டு விட்டுச் சென்றனர் கொலையாளிகள்.
தஞ்சாவூரை அடுத்து உள்ள களிமேடு ராஜேந்திரபுரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மகன் சூர்யா என்கிற சூரியமூர்த்தி. இவர் ஒரு ரவுடி.
பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. கடந்த ஆண்டு பிருந்தாவனம் என்ற இடத்தில் நந்தகுமார், ராஜேந்திரன் ஆகிய இருவர் கொலை செய்யப்பட்டனர். அதில் சூர்யாவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.
இந்த இரட்டைக் கொலைக்குப் பின்னர் குடும்பத்தோடு வடகால், மரவாணிப்பட்டு என்ற பகுதிக்கு இடம் பெயர்ந்தார் சூர்யா.
இந்த நிலையில், நேற்று இரவு வடகால் ஊராட்சித் தலைவர் சின்னையன் வீட்டில் அவரது தம்பி சிவா என்பவருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தாக் சூர்யா. இரவு அங்கேயே அவர் படுத்துத் தூங்கியுள்ளார்.
நள்ளிரவில் சூர்யாவை எழுப்பிய சிலர் அவரை அழைத்துச் சென்றுள்ளனர். இந்த பின்னணியில் இன்று காலை சூர்யாவின் உடல் சரமாரியாக வெட்டப்பட்டு வடவாறு வாய்க்காலில் கிடந்தது.
கள்ளப்பெரம்பூர் போலீஸார் விரைந்து சென்று உடலை மீட்டனர். முகத்தை மிகக் கோரமாக வெட்டிச் சிதைத்துள்ளனர்.
சூர்யா இதற்கு முன்பு சம்பந்தப்பட்ட கொலைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட சிலர்தான் இதை பழிக்குப் பழியாக செய்திருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
சூர்யாவுக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், ஒன்றரை வயதில் பெண் குழந்தையும் உள்ளனராம்.
இக்கொலையால் தஞ்சையில் பரபரப்பு நிலவுகிறது.