பன்றிகளைப் பிடித்து ரூ. 3 லட்சத்துக்கு விற்றதாக நகராட்சி கமிஷனர் மீது புகார்
கடையநல்லூர்: எவ்வித முன் அறிவிப்பும் இன்றி இரவோடு இரவாக பன்றிகளை திருட்டு தனமாக பிடித்து ரூ. 3 லட்சத்துக்கு விற்பனை செய்ததாக கடையநல்லூர் நகராட்சி ஆணையாளர் மீது பன்றி உரி்மையாளர்கள் புகார் கூறியுள்ளனர்.
இதுகுறித்து கடையநல்லூர் பன்றி உரி்மையாளர்கள் வேலுசாமி, கனி, கோபால், மாரியப்பன், செல்வராஜ் ஆகியோர் கலெக்டருக்கு ஒரு மனு அனுப்பியுள்ளனர்.
அதில், நாங்கள் தாழ்த்தப்பட்ட பழங்குடியினரான காட்டு நாயக்கர் மலைக்குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். பரம்பரையாக பன்றி வளர்த்து தொழில் செய்து வருகிறோம். இதனால் பொதுமக்களுக்கு எந்த இடைஞ்சலும் இல்லை.
இந்நிலையில் நகராட்சி ஆணையர் நகராட்சி எல்லைக்குள் பன்றி வளர்க்கக் கூடாது என எங்களுக்கு நோ்ட்டீஸ் அனுப்பினார்.
அதையடுத்து எங்களது சொந்த இடத்தில் வேலி போட்டு பன்றி வளர்த்து வந்தோம். இந்நிலையில் கடந்த வாரம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இரவோடு இரவாக நகராட்சி ஆணையர், மதுரையை சேர்ந்த பாண்டி என்பவர் மூலம் சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 250 பன்றிகளை பிடித்து வேனில் ஏற்றி கொண்டு சென்று விற்பனை செய்து விட்டார்.
எனவே எங்கள் பன்றிகளை திருடி விற்ற ஆணையர் மீதும், அதை வாங்கிய நபர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து எங்களுக்குரிய பன்றிகளையோ அல்லது அதற்குரிய பணத்தையோ பெற்றுத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.
நகராட்சி ஆணையர், திருட்டுத்தனமாக பன்றிகளைப் பிடித்து விற்று விட்டதாக கூறப்பட்டுள்ள புகாரால் கடையநல்லூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.