கட்சியிலிருந்து நீக்கப்பட்டும் திமுக எம்எல்ஏவாகவே நீடிக்கும் என்கேகேபி ராஜா
சென்னை: தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டாலும் என்.கே.கே.பி ராஜா சட்டசபையில் இன்னமும் தி.மு.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.வாகவே அதிகாரப்பூர்வமாக நீடிக்கிறார்.
தி.மு.க.வின் சார்பாக ஈரோடு சட்டசபைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் என்.கே.கே.பி.ராஜாவை சமீபத்தில் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்தது திமுக.
ஆள் கடத்தல், அடிதடி வழக்குகளில் அவர் சிக்கியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை கட்சியில் இருந்து ராஜா நீக்கப்பட்ட விவரத்தை சபாநாயகருக்கு தி.மு.க அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.
அதுமட்டுமின்றி தமிழக அரசு இணையதளத்திலும் என்.கே.கே.பி.ராஜா தி.மு.க எம்.எல்.ஏ என்றே குறிப்பிடப்பட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட எஸ்.வி.சேகரும் முன்பு சட்டசபையில், 'நான் அ.தி.மு.க எம்.எல்.ஏ தான், ஆனால் அ.தி.மு.க எம்.எல்.ஏ இல்லை' என்று படு குழப்பமான நிலையில் இருந்தார்.
அதிமுக தலைமை சபாநாயகர் ஆவுடையப்பனுக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் மூலம் தெரியப்படுத்திய பின்னரே அவர் எந்த கட்சியையும் சாராத எம்.எல்.ஏ.வாக அறிவிக்கப்பட்டார்.
கடந்த 2008ம் ஆண்டு ஆள் கடத்தல் வழக்கில் சிக்கி அமைச்சர் பதவியையும், கட்சிப் பதவியையும் இழந்து, கட்சியை விட்டும் நீக்கப்பட்டவர் என்.கே.கே.பி. ராஜா.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்த ராஜாவை, பவானிசேகர் எம்.எல்.ஏ.வை மிரட்டியதாகக் கூறி தொடரப்பட்ட மற்றொரு வழக்கில் போலீசார் கடந்த 16ம் தேதி கைது செய்தனர். தற்போது இவ்வழக்கிலும் நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் பெற்றுள்ளார் ராஜா.
இவரது நீக்கம் குறித்து திமுக தலைமை சபாநாயகருக்கு முறைப்படி தெரிவிக்காத காரணத்தால் ராஜா இன்னும் திமுக எம்.எல்.ஏவாகவே நீடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.