காதலன் ஏமாற்றிவிட்டார்- 'துபாய் ரிட்டர்ன்' காதலி புகார்
சென்னை: துபாயில் தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டு இந்தியாவுக்கு வந்துவிட்ட காதலன் மீது நடவடிக்கை எடுக்குமாறு காதலி போலீசில் புகார் அளித்துள்ளார்.
சென்னை, தாம்பரம் அருகே உள்ள முடிச்சூரை சேர்ந்தவர் அப்துல் லத்தீப். இவரது மகள் ஷெரீனா பேகம் (33). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு வேலைக்காக துபாய் சென்றார்.
அப்போது இவருக்கும், துபாயில் வேலை செய்து வந்த அன்வர்உசேன் (45) என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அங்கு இருவரும் கணவன்-மனைவியாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் திடீரென 3 மாதங்களுக்கு முன்னர், ஷெரீனாவிடம் சொல்லாமல் அன்வர் உசேன் தனது சொந்த ஊரான காட்டுமன்னார்கோவிலுக்கு திரும்பிவிட்டார்.
காதலனை தேடி இந்தியாவுக்கு திரும்பிய ஷெரீனா பேகம், சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அன்வர் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளுடன் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில், 'அன்வர் உசேனும் நானும் துபாயில் 4 ஆண்டுகளாக குடும்பம் நடத்தினோம். திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்துவது துபாயில் சட்ட விரோதமானது. ஒருமுறை போலீசில் சிக்கிய போது, அண்ணன்-தங்கை என்று கூறி ஏமாற்றினோம்.
விடுதலையான பின்னர் ஊருக்கு சென்று உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று அன்வர் கூறினார். ஆனால் திடீரென என்னிடம் சொல்லாமல் சொந்த ஊருக்கு சென்று விட்டார். அவரை என்னால் சந்திக்க முடியவில்லை.
எனவே என்னை ஏமாற்றிய அன்வர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்' என்று ஷெரினா குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.