இந்தியாவில் சம்பிரதாய வேலை பார்க்க நான் தயாயரில்லை - வெங்கி ராமகிருஷ்ணன்
நோபல் பரிசு வென்ற பின்னர் முதல்முறையாக இந்தியா வந்துள்ளார் ராமகிருஷ்ணன். மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அவரிடம், நீங்கள் இந்தியாவி்ல் பணிபுரிவீர்களா எனக் கேட்டபோது,
'இந்திய அரசு கேட்டுக்கொண்டால் அதுபற்றி யோசிக்க வேண்டும். எனினும், குறிப்பாக நான் சம்பந்தப்பட்டுள்ள துறை சார்ந்த பணி என்றால் இந்தியாவுக்கு உதவ தயாராக உள்ளேன்.
ஆனால் நோபல் பரிசு பெற்றவர் என்பதற்காக என்னை சும்மா வைத்துக் கொண்டு ஏதாவது சம்பிரதாய, அலங்கார வேலை தந்தால், நான் அதற்கு தயாராக இல்லை. என் நேரத்தை வீணடிக்க மாட்டேன். எனக்கு வேறு பல வேலைகல் நிறையவே உள்ளன.
இந்தியாவில் உள்ள விஞ்ஞானிகள் சிறப்பாக செயல்படுகிறார்கள். இந்நிலையில் இந்திய அரசு என்னை அழைக்கிறது என்றால் அதற்கு தகுந்த காரணங்கள் இருந்தாக வேண்டும். அப்போது தான் நான் சம்மதிப்பது குறித்து யோசிக்க முடியும்' என்றார்.
உயிரி தொழி்ல்நுட்பம் மிகவும் மிக முக்கியமானது. இந்திய நடுத்தர மக்களின் வாழ்வில் உயிரி தொழில்நுட்பம் பெரியளவில் மாற்றத்தை கொண்டுவரும் என கருதுகிறீர்களா என கேட்டபோது, 'எல்லாம் சரிதான். ஆனால் நான் எதற்காக தேவைப்படுகிறேன். நிறைய இந்திய விஞ்ஞானிகள் இருக்கிறார்களே.
டாடா, ஐஐஎஸ் என பலஇடங்களில் திறமையான விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் செய்ய முடியாத எதை நான் செய்யவேண்டும் என சொல்லட்டும் அப்போது நான் அதுபற்றி சிந்திக்கிறேன்' என்று பதில் அளித்தார்.