ரஷ்ய பெண் பொறியாளரிடம் சில்மிஷம் - வாலிபர் கைது
வள்ளியூர்: கூடங்குளத்தில் ரஷ்ய பெண் பொறியாளரிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் கூடன்குளத்தி்ல் அணுமின் நிலைய கட்டுமான பணியில் இந்திய பொறியாளர்களுடன், ரஷ்ய பொறியாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் கூடன்குளத்தை அடுத்த அணுவிஜய் நகரியத்தில் தங்கியுள்ளனர்.
நேற்று விடுமுறை நாள் என்பதால் ரஷ்யாவை சேர்ந்த பெண் முதன்மை பொறியாளர் கலீல்னா லோவனா, தனது மொழி பெயர்ப்பாளர் பாவல்பெடோரிச், மற்றும் அவரது மனைவி அலா ஆகியோருடன் அங்குள்ள கடலில் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கலீல்னா லோவனாவிடம் சில்மிஷம் செய்தார். இதையடுத்து அவரை பிடிக்க முயற்சித்த போது கடற்கரையில் இருந்த கைப்பை மற்றும் பொருட்களை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார். பின்னர் அணுவிஜய் நகரியத்தை சேர்ந்த டிமிட்ரி என்பவர் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி பிடித்து கூடன்குளம் போலீசில் ஓப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டம் ஆலந்தலையை சேர்ந்த ஆஸ்டின் மகன் பால்டின் என்பதும், கூத்தங்குழியை சேர்ந்த உறவினர் வீட்டுக்கு வரும்போது கலீல்னா லோவனாவிடம் சில்மிஷம் செய்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் பால்டினை கைது செய்து தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.