தவறான கொள்கைகளை பின்பற்றும் மத்திய அரசு- வெங்கையா புகார்
சென்னை: ஏற்றுமதி இறக்குமதி, வரி விதிப்பு போன்றவற்றில் தவறான பொருளாதார கொள்கைகளை மத்திய அரசு கடைப்பிடிப்பதால் தான் விலைவாசி உயர்ந்துள்ளது என்று பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.
பா.ஜ.க முன்னாள் தலைவர் வெங்கையா நாயுடு சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு பெட்ரோல் விலையை மத்திய அரசு குறைத்தது. தேர்தல் முடிந்தவுடன் விலையை உயர்த்தி விட்டது.
கடந்த ஆண்டு மொத்த விலை குறியீடு 246 புள்ளியாக இருந்தது. இந்த ஆண்டு 287ஆக உயர்ந்துவிட்டது. 20 சதவீதம் விலை உயர்ந்து இருக்கிறது. அரிசி உற்பத்தி 23 சதவீதம் குறைந்து விட்டது.
ஏற்றுமதி இறக்குமதி, வரி விதிப்பு போன்றவற்றில் தவறான பொருளாதார கொள்கைகளை மத்திய அரசு கடைப்பிடிப்பதால் தான் விலைவாசி உயர்ந்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் கட்டாய ஓட்டுரிமை என்ற முன் மாதிரியான திட்டத்தை நரேந்திர மோடி கொண்டு வந்துள்ளதால் காங்கிரஸ் எதிர்க்கிறது.
தெலுங்கானா பிரச்சினையால் ஆந்திராவில் உச்சக்கட்ட சூழ்நிலை உள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ்தான் ஆள்கிறது. எனவே சுமூகமான சூழ்நிலை ஏற்படுத்த அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று கூறினார்.
பேட்டியின் போது மாநில தலைவர் இல.கணேசன், செயலாளர் குமாரவேலு ஆகியோர் உடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications