பென்னாகரம் தேர்தல்: ஆளுநர் உரையில் அறிவிப்புகள் வெளியிடலாமா?
2010-ம் ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் வரும் ஜனவரி 6-ந் தேதியன்று, ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. ஆளுநர் உரையின்போது, தமிழக அரசின் சாதனைகள் பட்டியலிடப்படும். அத்துடன், தமிழக அரசின் புதிய சலுகைகள், புதிய அறிவிப்புகளும் இடம் பெறுவதுண்டு.
கடந்த 2009-ம் ஆண்டு ஆளுநர் உரையில்தான், உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான முதல்-அமைச்சரின் காப்பீடு திட்டம் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியானது.
கடந்த 2008-ம் ஆண்டுக்கான ஆளுநர் உரையில், தைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடுவது பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும், தமிழகத்தில் உள்ள 6,650 அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் நடுநிலைப்பள்ளிகளுக்கு இலவச கம்ப்யூட்டர்கள் அளிக்க ஆவன செய்யப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது.
இந்தநிலையில், வரும் 6-ந் தேதி, சட்டமன்றத்தில் ஆளுநர் உரை இடம்பெறுகிறது. இந்த உரையில் புதிய சலுகை ஏதாவது அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் ஜனவரி 20ம் தேதி பென்னாகரம் தொகுதியில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆளுநர் உரையில் புதிய அறிவிப்பு, சலுகை அறிவிக்கப்படலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறுகையில், ஆளுநர் உரையில் புதிய அறிவிப்புகள் வெளியிடலாமா? அல்லது பென்னாகரம் தொகுதியை தவிர்த்துவிட்டு மற்ற பகுதிகளுக்கு பொருந்தும் திட்டங்களை அறிவிப்பதில் தடை ஏதும் இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதுமட்டுமின்றி, பொங்கல் பண்டிகையின்போது இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இடைத்தேர்தல் நடக்கும் சூழலில், இந்த ஆண்டும் அதை தொடர வழி உள்ளதா என்பது போன்ற சந்தேகங்களுக்கு பதில் பெறுவதற்காக, தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதவுள்ளோம்.
அந்த கடிதம் வியாழக்கிழமை காலை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் தரும் பதிலை பொறுத்து, எங்களது நடவடிக்கைகள் அமையும் என்றார்.