தேசிய தீவிரவாத தடுப்பு மையம் 2010 இறுதியில் உருவாக்கப்படும்- ப.சிதம்பரம்
டெல்லி: மாவட்டங்கள் தோறும் கட்டுப்பாடு அறைகள் கொண்ட அதிநவீன மற்றும் முழுமையான பாதுகாப்பு நெட்வொர்க் மூலம் தேசிய தீவிரவாத தடுப்பு மையத்தை அடுத்தாண்டு இறுதிக்குள் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக திறமையான ஆண் மற்றும் பெண் போலீஸ் படையை மாநில அரசுகள் நியமிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் சிதம்பரம் இதுகுறித்து பேசுகையில், 'இந்தியாவில் பாதுகாப்பு கட்டமைப்பை சீரமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள தீவிரவாத தாக்குதல்களை தடுக்கும் வகையில் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் உருவாக்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் இதற்கான கட்டமைப்புப் பணிகள் நிறைவடைந்துவிடும்.
தீவிரவாதத்தை முற்றிலுமாக வேரருப்பது தான் இதன் நோக்கம். இதுபோன்ற கட்டமைப்பு இதுவரை இந்தியாவில் இல்லை. நாட்டின் அடிமட்டத்தில் இருந்து இந்த அமைப்பு வார்த்தெடுக்கப்படும். இதுபோன்ற ஒரு அமைப்பை அமெரிக்கா 36 மாதங்களில் உருவாக்கியது.
நமக்கு அவ்வளவு காலம் செலவாகக் கூடாது. 2010 இறுதிக்குள் இந்த அமைப்பு செயல்படத் தயாராக வேண்டும். இதற்காக தகுதியும், திறமையும் கொண்ட ஆண், பெண் போலீஸ் படையை மாநில அரசுகள் நியமிக்கவேண்டும்.
முதலில் 4 லட்சம் கான்ஸ்டபிள்களை பணியில் சேர்க்கப்படுவார்கள். அதன்பின் தேவைக்கு ஏற்ப ஆட்தேர்வு நடக்கும். இந்த கட்டமைப்புக்காக 24 மணிநேரமும், வாரத்தின் 7 நாட்களும் உஷாராக இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறைகள் அனைத்து மாவட்டங்களில் அமைக்கப்படும்.
நாடு முழுவதும் உள்ள மையங்களுக்கும் புலனாய்வு மற்றும் பாதுகாப்புக்கு தேவையான தகவல்களை பகிர்ந்தளிக்கும் வகையில் 'தேசிய இன்டலிஜென்ஸ் கிரிட்' வசதியையும் இதற்காக மத்திய அரசு உருவாக்கித் தரும்' என்றார்.
இந்தாண்டில் 13 முறை தீவிரவாதிகளின் சதி முறியடிப்பு:
மேலும், இந்தியாவில் 2009ம் ஆண்டில் மட்டும் 13 முறை தீவிரவாத தாக்குதல் திட்டங்கள் முறியடிக்கப்பட்டதாகவும் சிதம்பரம் தெரிவித்தார். எனினும் அது குறித்து விளக்கமாக தகவல் கூற மறுத்துவிட்ட சிதம்பரம், புலனாய்வுத் துறையின் திறமையான செயல்பாடுகளே அதற்கு காரணம் என்று கூறினார்.