ஆர்க்குட்டில் மனைவி பெயரில் ஆபாச அவதூறு-சென்னை என்ஜீனியர் கைது
பெங்களூர்: பெங்களூரில் வசித்து வரும் தனது மனைவி யின் பெயரில் ஆர்குட்டில் ஒரு கணக்கை ஆரம்பித்து அதில் அவரை ஆபாசமாக சித்தரித்து, செல்போன் எண்ணையும் இடம் பெறச் செய்து அவதூறு ஏற்படுத்திய சென்னையைச் சேர்ந்த என்ஜீனியரை போலீஸார் கைது செய்தனர்.
அந்த நபரின் பெயர் பிரகாஷ் ராவ். சென்னையில் வசித்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவரது மனைவி பெங்களூரைச் சேர்ந்தவர்.
பிரகாஷ் ராவும், அவரது மனைவியும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பிரகாஷ் ராவ் மீது ராம்நகர் மாவட்டம், தலகட்டபுரா காவல் நிலையத்தில் வரதட்சணைக் கொடுமைப் புகார் கொடுக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், பிரகாஷ் ராவின் மனைவி பெங்களூர் சைபர் கிரைம் போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில் சில நாட்களாக எனது செல்போனை பல்வேறு ஆண்கள் தொடர்பு கொண்டு ஆபாசமாக, தவறாக பேசி வருகின்றனர். எனது பெயரில் யாரோ சிலர் ஆர்குட்டில் போலியான கணக்கை ஆரம்பித்து அதில் என்னைப் பற்றி அசிங்கமாக எழுதியுள்ளனர். எனது செல்போன் எண்ணையும் அதில் குறிப்பிட்டுள்ளனர் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து சைபர் கிரைம் போலீஸார் ஐபி முகவரியைக் கண்டுபிடித்தனர். பின்னர் அதை வைத்து விசாரணை நடத்தியபோது பிரகாஷ் ராவ்தான் இதைச் செய்தது என்று தெரிய வந்தது.
அவருடைய லேப்டாப் கம்ப்யூட்டரில் இதுதொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களை போலீஸார் கைப்பற்றினர். போலியான இ மெயில் முகவரி மூலம் ஆர்க்குட் தளத்தைப் பயன்படுத்தி இப்படிச் செய்துள்ளார் பிரகாஷ் ராவ்.
மனைவியைப் பழிவாங்குவதற்காக பிரகாஷ் ராவ் இவ்வாறு செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.












Click it and Unblock the Notifications