அரசு மருத்துவமனையில் சிகிச்சை- மாணவி கண் பார்வை பறிபோனது
நெல்லை: நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாணவியின் கண் பார்வை பறிபோனது. இதுகுறித்து நடவடிக்கை கோரி அவரது பெற்றோர் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.
முக்கூடல் அருகேயுள்ள கனியன்குளத்தை சேர்ந்தவர் சிவநாதன். இவரது மகள் மாலதி. இவர் சிங்கம்பாறையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் மாலதிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மாலதிக்கு திடீரென பார்வை பறிபோனது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அங்கு பணிபுரிந்த டாக்டரிடம் கேட்டபோது சரியான பதில் சொல்லவில்லை என தெரிகிறது.
இதையடுத்து முக்கூடல் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சபாநாயகர் ஆவுடையப்பன், கலெக்டர் ஜெயராமன் ஆகியோரிடம் மாலதியின் பெற்றோர் புகார் கொடுத்தனர்.
அதில் மாலதிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை நடத்த வேண்டும். மீண்டும் பார்வை கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட சபாநாயகரும், கலெக்டரிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
மர்ம காய்ச்சல் - மாணவன் பலி
இதற்கிடையே, சுரண்டையில் மர்மக் காய்ச்சலுக்கு மாணவர் ஒருவர் பலியானார்.
தென்காசி அருகேயுள்ள கீழப்புலியூரை சேர்ந்த செல்லசாமி மகன் சோமு. சுரண்டை அரசு கல்லூரியில் படித்து வந்த இவர் ஒரு வாரமாக காய்ச்சலால் அவதிப்பட்டார்.
அதிகாலை அவர் திடீரென இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கல்லூரி மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்த கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மருந்து, மாத்திரை சாப்பிட்டாலும் கூட சில இடங்களில் நோய் முற்றி உயிர் பலியும் ஏற்படுகிறது. சமீபத்தில் மதுரை கல்லூரியில் தங்கி படித்து வந்த சாம்பவர் வடகரையை சேர்ந்த தங்கசாமி மகள் மாரிசெல்வம் என்பவர் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு திடீரென இறந்தார்.
இளம் வயதினர் இந்த மர்ம நோயால் பலியாவது பொதுமக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. தடுப்பு மருந்துகள் பயன்படுத்தினால் நோயின் பிடியில் இருந்து தப்பலாம் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications