11 தெலுங்கானா காங். எம்.பிக்கள் விலக முடிவு- ஜெயபால் ரெட்டியும் விலகுவாரா?

தெலுங்கானா பகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு 12 எம்.பிக்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர் மத்திய அமைச்சர் ஜெயபால் ரெட்டி.
தெலுங்கானா விவகாரத்தில் மத்திய அரசு நேற்று பல்டி அடித்ததைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள அனைத்து எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், கவுன்சிலர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள் பதவி விலக தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் பதவி விலகி வருகின்றனர்.
சந்திரசேகர ராவ், விஜயசாந்தி ஆகியோர் தங்களது ராஜினாமா கடிதங்களை அனுப்பி வைத்து விட்டனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தெலுங்கானாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 12 எம்.பிக்களும் பதவி விலக தயங்குவதாக பேச்சு எழுந்தது.
இதையடுத்து ஜெயபால் ரெட்டியைத் தவிர மற்ற 11 பேருடனும் சந்திரசேகர ராவ் போனில் பேசி தெலுங்கானாவுக்கு உங்களது ஆதரவு அவசியம், ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்த உதவுங்கள் என்று கோரினார். இதையடுத்து 11 காங்கிரஸ் எம்.பிக்களும் விலகி விடுவது என்ற முடிவை எடுத்து விட்டனர்.
தங்களது ராஜினாமா கடிதங்களை சபாநாயகரிடம் அளிப்பதா அல்லது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துக் கொடுப்பதா என்று தற்போது யோசனையில் உள்ளனராம்.
இந்தக் குழப்பத்துடன், அவர்கள் ஜெயபால் ரெட்டியை சந்தித்துப் பேசி அவரது ஆலோசனையைக் கோரியுள்ளனர்.
ஜெயபால் ரெட்டியும் ராஜினாமா செய்ய முன்வந்தால் அது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியாகவும், பெரும் பின்னடைவாகவும் அமையும் என்பதால் காங்கிரஸ் வட்டாரம் பரபரப்படைந்துள்ளது.
முன்னதாக டெல்லியில் உள்ள ஆந்திர பவனில் கூடி இந்த 11 காங்கிரஸ் எம்.பிக்களும் ஆலோசனை நடத்தினர்.
தங்களது முடிவு குறித்து எம்.பிக்களில் ஒருவரான மது யக்ஷி கூறுகையில், நாங்கள் ராஜினாமா செய்ய முடிவெடுத்து விட்டோம். கடிதத்தை யாரிடம் கொடுப்பது என்பது மட்டும்தான் முடிவாகாமல் உள்ளது.
அரசின் நடவடிக்கை குறித்து எங்களது அதிருப்தியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் நாங்கள் நிச்சயம் தெரிவிப்போம்.
ஜெயபால் ரெட்டி வெறும் எம்.பி. மட்டுமல்ல, அமைச்சராகவும் இருக்கிறார். எனவே அவரை கட்டாயப்படுத்த நாங்கள் விரும்பவில்லை. அனைத்து அம்சங்களையும் ஆலோசித்த பின்னர் தான் அவரால் முடிவெடுக்க முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications