கற்பழிப்பு புகார்: தலைமறைவான சாமியார் பெங்களூரில் தஞ்சம்
சென்னை: கற்பழிப்பு புகாரில் சிக்கியதால், தலைமறைவான சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் போலீசுக்கு பயந்து பெங்களூரில் பதுங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.
சென்னை, நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர ஸ்ரீகுமார். இவர் சக்தி விலாஸ் மிஷன் என்ற பெயரில் ஒரு அமைப்பை நடத்தி வந்தார். இவர் மீது தேனாம் பேட்டையைச் சேர்ந்த ஹேமலதா என்ற பெண் பரபரப்பான புகார் ஒன்றை கொடுத்தார்.
அதில், சாமியார் ஸ்ரீகுமார் தன்னை மயக்கி கற்பழித்து விட்டதாகவும், வெளியே சொன்னால் கற்பழித்த போது எடுத்த ஆபாச வீடியோவை வெளியி்ட்டு விடுவேன் என மிரட்டி பலமுறை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து மாம்பலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்டமாக புகார் கொடுத்த ஹேமலதாவிடம் போலீசார் முழுமையாக விசாரணை நடத்தி முடித்து விட்டனர். மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது.
அடுத்ததாக சாமியார் ஸ்ரீகுமாரிடம் போலீசார் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு வாரத்துக்கு மேலாகியும் இதுவரை சாமியார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்தில் ஆஜராகவில்லை.
இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன் திடீரென சாமியார் ஸ்ரீகுமார் சென்னையை விட்டு தப்பி ஓடி தலைமறைவானார். திருப்பதி, மும்பை, டெல்லி என பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த சாமியார் நேற்று முன்தினம் பெங்களூரை அடைந்துள்ளார்.
அவரது செல்போன் சேவையின் சிக்னல் டவரை வைத்து போலீசார் இதனை உறுதி செய்தனர். அதன் பிறகு கடந்த 2 நாட்களாக அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதன் காரணமாக அவரை தொடர்பு கொள்ள முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள். இதனை தொடர்ந்து சாமியார் ஸ்ரீகுமாரை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சாமியார் மனைவி லலிதாவிடம் கேட்டபோது, போலீசுக்கு என்னென்ன விவரங்கள் தேவையோ அவை அனைத்தையும் தேனாம்பேட்டையில் வைத்து விசாரிக்கும் போதே கொடுத்து விட்டோம். இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications