முத்தரப்புத் தொடர்- சச்சினுக்கு ஓய்வு, இஷாந்த், பிரவீன் நீக்கம்
கொல்கத்தா: வங்கதேச முத்தரப்புத் தொடருக்கான இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இஷாந்த் சர்மா, பிரவீன் குமார் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
ஜனவரி 4ம் தேதி இந்தியா, இலங்கை, வங்கதேசம் இடையிலான முத்தரப்புத் தொடர் வங்கதேசத்தில் தொடங்குகிறது.
இதில் கலந்து கொள்ளும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வேகப் பந்து வீச்சாளர் அசோக் திண்டா சேர்க்கப்பட்டுள்ளார். ரோஹித் சர்மா நீண்ட இடைவெளிக்குப் பின்னர் திரும்பியுள்ளார். இஷாந்த் சர்மா, பிரவீன் குமார் நீக்கப்பட்டுள்ளனர்.
காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான நான்கு ஒரு நாள் போட்டிகளில் விளையாடாத நிலையிலும், யுவராஜ் சிங்குக்கும் அணியில் இடம் கொடுத்துள்ளனர்.
உடல் நலமின்மை காரணமாக இலங்கைத் தொடரில் விளையாட முடியாத ஸ்ரீசாந்த்துக்கு முத்தரப்புத் தொடரிலும், இலங்கைக்கு எதிரான ஐந்தாவது மற்றும் ஒரு நாள் போட்டியிலும் இடம் கிடைத்துள்ளது.
2வது சுழற்பந்து வீச்சாளராக பிரக்யான் ஓஜாவுக்குப் பதில், அமீத் மிஸ்ரா தேர்வாகியுள்ளார்.
சச்சின் ஓய்வை விரும்பியதால் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்பார் என்றும் தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.
ஜனவரி 5ம் தேதி டாக்காவில் நடைபெறும் போட்டியில் இந்தியாவும், இலங்கையும் மோதுகின்றன. அதையடுத்து 7, 10, 11 ஆகிய தேதிகளி்ல இந்தியா மோதுகிறது. இறுதிப் போட்டி ஜனவரி 13ம் தேதி நடைபெறும்.
இதையடுத்து இரு டெஸ்ட் போட்டிகளில் வங்கதேசத்தை சந்திக்கிறது இந்தியா. முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை சிட்டகாங்கிலும், 2வது போட்டி ஜனவரி 24 முதல் 28 வரை டாக்காவிலும் நடைபெறும்.
5வது போட்டி- ஸ்டைலாக முடிக்குமா இந்தியா?:
இந் நிலையில் இலங்கைக்கு எதிரான 5வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை டெல்லியில் நடைபெறுகிறது. ஏற்கனவே தொடரை வென்று விட்ட இந்தியா, நாளைய போட்டியையும் வென்று இந்த ஆண்டின் கடைசித் தொடரை வெற்றிப் புன்னகையுடன் முடிக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இலங்கைக்கு எதிரான ஐந்து போட்டிகளைக் கொண்ட தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் வென்று விட்டது. இந்த நிலையில் நாளை கடைசி மற்றும் 5வது ஒரு நாள் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறவுள்ளது.
நாளைய போட்டிக்கு கேப்டன் டோணி திரும்பியுள்ளார். தொடரை வென்று விட்ட போதிலும், நாளைய போட்டியிலும் இந்தியா வென்று, இலங்கையை மண்ணக் கவ்வச் செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இதை இந்தியா பூர்த்தி செய்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.