திருச்சி வந்த இலங்கை தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம் நாடு கடத்தல்
திருச்சி: திருச்சிக்கு வந்த இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. சிவாஜி லிங்கம், தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படாமல் விமான நிலையத்தோடு திருப்பி அனுப்பப்பட்டார்.
தஞ்சையில் நேற்றும், இன்றும் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாடு நடந்தது. இதில் பங்கேற்பதற்காக சிவாஜிலிங்கம் திருச்சிக்கு விமானம் மூலம் வந்தார்.
ஆனால் அவரை தமிழகத்திற்குள் அனுமதிக்க அனுமதி இல்லை என்று கூறி மத்திய குடியுரிமைத் துறை அதிகாரிகள் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பி விட்டனர்.
திருச்சியிலிருந்து துபாய் செல்லும் விமானத்தில் சிவாஜிலிங்கத்தை ஏற்றி அனுப்பி வைத்தனர். இன்று அவர் துபாயிலிருந்து கொழும்பு போய்ச் சேர்ந்தார்.
இலங்கை அதிபர் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுகிறார் சிவாஜிலிங்கம். இவரால் தமிழர்களின் கணிசமான வாக்குகள் பிளவுபடும் என ராஜபக்சே அஞ்சுகிறார். இதன் காரணமாகவே அவரது வேண்டுகோளின் பேரில் இந்திய அதிகாரிகள், சிவாஜிலிங்கத்தை இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.