மாநாட்டு கொடி அகற்றப்பட்டதால் தஞ்சையில் நெடுமாறன் சாலை மறியல்
தஞ்சாவூர்: தஞ்சையில் நேற்று நடைபெற்ற உலகத்தமிழர் மாநாட்டின் போது, மாநாட்டு கொடியை நகராட்சி ஊழியர்கள் அகற்றியதை கண்டித்து உலகத் தமிழர் கூட்டமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் சாலை மறியலில் ஈடுபட்டார்.
உலகத் தமிழர் கூட்டமைப்பு சார்பில் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் மாநாடு தஞ்சையில் நேற்றுகாலை தொடங்கியது.
மாநாட்டையொட்டி தஞ்சை-புதுக்கோட்டை சாலையின் இரு ஓரத்திலும், மணிமண்டபம் அருகே உள்ள ரவுண்டானாவிலும் மாநாட்டு கொடி தோரணமாக கட்டப்பட்டிருந்தது.
நேற்று காலை திடீரென நகராட்சி ஊழியர்கள் ரவுண்டானாவில் கட்டப்பட்டிருந்த மாநாட்டு கொடிகளை அறுத்து அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த தகவல் மாநாட்டில் கலந்து கொண்ட உலகத் தமிழர் கூட்டமைப்பினருக்கு தெரியவந்தது. உடனே அவர்கள் கும்பலாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியாத அளவிற்கு ரவுண்டானாவை சுற்றி 4 புறங்களிலும் சாலை மறியலில் ஈடுபட்டனர். கொடி அறுக்கப்பட்ட தகவலை அறிந்த பழ.நெடுமாறன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.
திடீரென சாலை மறியல் நடந்ததால் நாலாபுறமும் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அனுமதியின்றி கொடி கட்டப்பட்டதால் அப்புறப்படுத்தினோம் என நகரசபை கமிஷனர் போனில் தெரிவித்தார்.
பின்னர் அதே இடத்தில் மீண்டும் கொடிகளை கட்டினர். பின்பு ரவுண்டானாவில் இருந்து தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பியபடி மாநாட்டு பந்தலை நோக்கி சென்றனர். அதைத் தொடர்ந்து பஸ் போக்குவரத்து சீரானது. இந்த திடீர் போராட்டத்தினால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.