மகனின் தீவிரவாத சதி குறித்து அமெரிக்காவை உஷாப்படுத்திய நைஜீரியரின் தந்தை
வாஷிங்டன்: அமெரிக்க விமானத்தை தகர்க்க முயன்று கைதாகியுள்ள நைஜீரிய இளைஞரின் தந்தை தனது மகன் சதிச் செயலில் ஈடுபடலாம் என்று அமெரிக்க பாதுகாப்புப் படையினரை எச்சரித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அமெரிக்க விமானத்தை தகர்க்க முயன்றதாக நைஜீரியாவைச் சேர்ந்த 23 வயதான உமர் பரூக் அப்துல் முத்தலாப் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓடும் விமானத்தில் வெடி விபத்தை ஏற்படுத்தி அதைத் தகர்க்க முயன்று பயணிகளால் இவர் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
இவரது தந்தை ஒரு பிரபல வங்கியாளர் என்பதும், இங்கிலாந்தில் கல்லூரிப் படிப்பு படித்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.
லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜீனியரிங் படிப்பை முடித்தவர் முத்தலாப். இவருடைய குடும்பம் நைஜீரியாவின் கடுனா என்ற நகரில் வசித்து வருகிறது.
முத்தலாப்பின் தந்தை பெயர் அல்ஹாஜி உமர் முத்தலாப். சமீபத்தில்தான் இவர் பர்ஸ்ட் பேங்க் பிஎல்சி என்ற வங்கியில் உயர் பதவி வகித்து ஓய்வு பெற்றார். இந்த வங்கி நைஜீரியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றாகும்.
மெக்கானிக்கல் என்ஜீனியரிங் படிப்பை இங்கிலாந்தில் முடித்த பின்னர் துபாய்க்கு மேற்படிப்பு படிக்கச் சென்றார் முத்தலாப். ஆனால் திடீரென தான் ஏமனுக்குப் போகப் போவதாக வீட்டுக்குப் போன் செய்து கூறியுள்ளார்.
இதனால் இவரது தந்தைக்கு சந்தேகம் வந்துள்ளது. உடனடியாக நைஜீரிய பாதுகாப்புத் துறையையும், அபுஜாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தையும் தொடர்பு கொண்டுள்ளார். தனது மகன் ஏதாவது ஜிஹாதி இயக்கத்தில் சேர வாய்ப்புள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.
ஆனால் இந்த எச்சரிக்கையை நைஜீரிய பாதுகாப்புத்துறையும், அமெரிக்க தூதரகமும் பொருட்படுத்தாமல் விட்டுள்ளன.
ஏமனுக்கு முத்தலாப் செல்வதற்கு அவரது குடும்பத்தினர் யாரும் இசைவு தரவில்லை. உண்மையில் அவர் ஏமனுக்குத் தப்பிச் சென்றார் என்றுதான் கூற வேண்டும் என தந்தை உமர் முத்தலாப் கூறுகிறார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகமும் மூலம் பலமுறை அமெரிக்காவுக்கு வந்து செல்வற்கான விசாவைப் பெற்றுள்ளார் முத்தலாப்.
அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லாததால் அவருக்கு விசா கிடைப்பது பிரச்சினையாக இருந்திருக்கவில்லை.












Click it and Unblock the Notifications