பெண்களிடம் வலுக்கட்டாயமாக 'ஹேப்பி நியூ இயர்' சொன்னால் ஈவ் டீசிங் கேஸ்!
சென்னை: நடந்து செல்லும் பெண்களை தடுத்து நிறுத்தி அவர்களின் விருப்பத்திற்கு மாறாக புத்தாண்டு வாழ்த்து சொன்னால் அவர்கள் மீது ஈவ் டீசிங் வழக்கு பதிவு செய்யப்படும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.
இதோ வந்து விட்டது புத்தாண்டு. இன்னும் 3 நாட்கள்தான். சென்னை மாநகரம் புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகிறது. கடற்கரைகளில் புத்தாண்டுக்கு முந்தைய டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவி களை கட்டியிருக்கும்.
சாலைகளில் வருவோர், போவோரிடம் கையைக் குலுக்கி ஹேப்பி நியூ இயர் என்று சொல்வது சகஜம். இதில் சில நேரங்களில் பிரச்சினையாகி சண்டை வரை போய் விடுவதும் உண்டு.
இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு பெண்களை நிறுத்தி வலுக்கட்டாயமாக அவர்களது கையைப் பிடித்து குலுக்கி ஹேப்பி நியூ இயர் சொல்வோரும் உண்டு. இதனாலும் சர்ச்சைகள் எழுவதுண்டு.
இதைத் தடுக்க தற்போது போலீஸார் புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளனர்.
மகாபலிபுரம் டி.எஸ்.பி. சம்மந்தமூர்த்தி இதுகுறித்து கூறுகையில்,
திருப்போரூர், பூஞ்சேரி, மாமல்லபுரம், முட்டுக்காடு, கோவளம் உள்பட 10 இடங்களில் புத்தாண்டையொட்டி சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளது.
ஹோட்டல்களில் நள்ளிரவு 1 மணிவரை புத்தாண்டு கொண்டாட நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படும். அன்றைய தினத்தில் ஹோட்டல்களில் ஆபாசமாகவும் அருவருப்பான உடையுடனும், நடனம் ஆடக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சாலைகளில் நடந்து செல்லும் பெண்களிடம் வலுக் கட்டாயமாக புத்தாண்டு வாழ்த்து சொல்பவர்கள் மீது ஈவ்டீசிங் வழக்கு பதிவு செய்யப்படும் என்றார் அவர்.
மேலும், சென்னை கடற்கரைச் சாலைகளில் அதி வேகமாக வாகனங்களை ஓட்டிக் கொண்டு, ஹேப்பி நியூ இயர் என கத்திச் செல்லக் கூடாது என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளையும், தடைகளையும் ஏற்கனவே மாநகர போலீஸார் விதித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications