விவாகரத்து-வேலையில்லா கணவனுக்கு பணம் தர மனைவிக்கு உத்தரவு
டெல்லி: விவாகரத்து வழக்கில், வேலையில்லாமல் இருக்கும் கணவனக்கு மனைவி வழக்கு செலவாக ரூ.10,000 கொடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விவாகரத்து வழக்கு செலவுக்காக, கணவருக்கு மனைவி பணம் கொடுக்க வேண்டும் என்று, சென்னை தம்பதிகள் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
சென்னையைச் சேர்ந்த சந்தோஷ் சாமி மற்றும் அவருடைய மனைவி இனிஸ் மிராண்டா ஆகியோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள்.
சந்தோஷ் சென்னையிலும், இனிஸ் மிராண்டா, தனது மகளுடன் பெங்களூரிலும் உள்ளனர். இனிஸ் மிராண்டா, குடும்ப வன்முறை சட்டத்தின்படி தனது கணவருக்கு எதிராக பெங்களூர் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார்.
இதற்கிடையே, திருமண பந்தத்தில் இருந்து விலகிச்செல்லும் மனைவியை சேர்த்து வைக்கும்படி, சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் சந்தோஷ் சாமி மற்றொரு வழக்கு தொடர்ந்தார்.
சென்னையில் தொடரப்பட்ட இவ்வழக்கை பெங்களூர் கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி, இனிஸ் மிராண்டா உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இம்மனு, உச்சநீதிமன்ற நீதிபதி தல்வீர் பண்டாரி தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மிராண்டாவின் மனுவை நீதிபதிகள் நிராகரித்தனர்.
அதோடு கணவன் சந்தோஷ் வேலையில்லாமல் இருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பெங்களூரில் நடந்து வரும் வழக்கில் ஆஜராக அவருக்கு பணம் தேவைப்படும். எனவே செலவுக்காக அவருக்கு மிராண்டா ரூ.10,000 கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
வழக்கமாக குற்றவியல் நடைமுறைச் சட்டம் 125வது பிரிவின் கீழ் விவாகரத்து வழக்குகள் நடைபெறும் போது, மனைவியின் பராமரிப்புச் செலவுக்காக கணவன் பணம் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடுவது வழக்கம்.
ஆனால், இந்த வழக்கில் கணவன் வேலையின்றி இருப்பதால் கணவனுக்கு மனைவி பணம் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருப்பது புதுமையாக உள்ளது.