பழநியில் 2வது ரோப்கார் அமைக்கும் திட்டம் தீவிரம்
பழநி: பழநியில் இரண்டாம் ரோப்காரை அமைக்க தகுதியுடைய நிறுவனத்தை தேர்வு செய்யும் பணி வரும் ஜனவரி 21ல் நடைபெறும் என என ரோப்கார் நிபுணர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பழநியில் இரண்டாம் ரோப்காரை அமைப்பதற்காக நியமிக்கப்பட்ட ரோப்கார் நிபுணர் குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் இரண்டாவது ரோப்கார் அமைப்பதற்காக புதுடில்லி, கோல்கட்டாவை சேர்ந்த நிறுவனத்தினர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்திற்கு பின்பு நிபுணர் குழுவினர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'இரண்டாவது ரோப்காரை அமைப்பதற்கான தகுதியுடைய நிறுவனத்தை தேர்வு செய்யும் பணி ஜனவரி மாதம் 21ம் தேதி அன்று நடைபெறும்.
அதன் பின்பு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, திட்ட மதிப்பீடு நிர்ணயம் செய்யப்படும். டெண்டர் எடுத்த ஒரு ஆண்டு காலத்திற்குள் பணியை முடித்து தர வேண்டும் என்பது விதி. இதில், பக்தர்களின் பாதுகாப்பு, பொருட்களின் தரம் முக்கியமாக கருதப்படும்.
இதை, மைசூரில் உள்ள மத்திய அரசு நிறுவனமான என்.ஐ. ஆர்.எம். தரக்கட்டுப்பாடு செய்யும். ரோப்கார் வடிவமைப்பு மத்திய அரசு நிறுவனங்களான தரமணி எஸ்.இ.ஆர்.சி., சென்னையிலுள்ள ஐ.ஐ.டிக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் பெற்ற பின்பு பணிகள் துவங்கப்படும்.
இரண்டாவது ரோப்காரில் ஒரு மணி நேரத்தில் 800 பக்தர்கள் பயணிக்க திட்டமிடப்பட்டுள்ளது' என்றனர்.