ஈராக்கில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்த சென்னை நிறுவனம்!
சென்னை: சென்னையைச் சேர்ந்த மினரல் வாட்டர் பேக்கேஜிங் சாதன தயாரிப்பு நிறுவனம் ஈராக்கில் ரூ 52 கோடி முதலீட்டில் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த நிறுவனமான ஷிவ்சு கனடியன் கிளியர் இண்டர்நேஷனல் மினரல் வாட்டர் தயாரிப்பு சாதனைங்களை உற்பத்தி செய்து வருகிறது. மினரல் வாட்டர் தயாரிக்க தேவையான அனைத்து உபகரணங்களையும் தயாரித்து, நிறுவும் பணியை இந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
ஈராக் நாட்டில் பெருகும் பாதுகாக்கப்பட்ட குடிநீரின் தேவையைக் கருத்தில் கொண்டு இந்த சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்துள்ளனர். நாளொன்றுக்கு 20 மெட்ரிக் லிட்டர் குடிநீரை இந்த நிலையம் சுத்திகரித்து வழங்கும்.
ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் முறையில், கடல் நீரை குடிநீராக்கி தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளுக்கு இந்த நிலையம் வழங்குகிறது.
இந்த வேலைக்கான ஒப்பந்தத்தைப் பெற பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களும் கடுமையாக மோதிய நிலையில் தங்கள் நிறுவனத்தின் வேலைத் திறனைப் பார்த்து திருப்தியுற்ற ஈராக் அரசு இந்த ஒப்பந்தத்தை அளித்துள்ளது என ஷிவ்சு நிறுவனம் தெரிவித்துள்ளது.